என்னது.. நாட்டின் பிரதமர் வேட்பாளரை சாதுக்கள் தீர்மானிப்பதா?: கொந்தளிக்கும் ஐ.ஜனதா தளம்

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதில் என்ன தயக்கம் என்று வி.ஹெச்.பி. மூத்த தலைவர் அசோக்சிங்கால் கேள்வி எழுப்பியிருந்தார். இது பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை கடும் அதிருப்தி அடையச் செய்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷிவானந்த் திவாரி, நாட்டின் பிரதமர் வேட்பாளரை சாதுக்களா தீர்மானிப்பது? அரசியல் கட்சிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்? நாட்டின் அரசியலை எங்கே கொண்டு சென்று கொண்டிருக்கிறீர்கள் ? என்று கொந்தளித்தார்.
மேலும் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசித்தான் தீர்மானிக்க வேண்டும். இந்தக் கட்சிகள்தான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதுதான் நிலைப்பாடு. மதச்சார்பற்ற முகம் கொண்ட ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றே அக்கட்சி கூறிவரும் நிலையில் இந்துத்துவா சக்திகள் பகிரங்கமாகவே மோடியை ஆதரிப்பதாக அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications