தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரமெல்லாம் தர முடியாது- ராஜபக்சே அறிவிப்பு
திரிகோணமலை: தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது சாத்தமியமில்லை. மீண்டும் நாடு பிளவுபட அனுமதிக்க முடியாது என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை சுதந்திர தின விழா திரிகோணமலையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராஜபக்சே பேசுகையில்,
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தன்னாட்சி அதிகாரம் வழங்கமுடியாது. நாட்டை இன ரீதியாக பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்த நாடாக நாம் உருவெடுத்து சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக தாய்நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்து சவால்களைச் சந்தித்து வந்துள்ளோம்.
சமூகங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் ஒற்றுமை நிலவுவது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நம்மிடையே பிளவுகள் ஏற்பட்டால் அது பல்வேறு எதிர்ப்பு சக்திகளை வலுப்படுத்திவிடும். நமது அனைத்துச் சமூகங்களும் ஒன்றுபட்டால், நாட்டுக்கு எதிரான சக்திகள் வலுவிழப்பதோடு, நமது சுதந்திரமும் பலப்படும்.
மக்கள் ஒற்றுமையுடன் வாழும்போது, அவர்களிடையே இன அல்லது மத வேறுபாடுகள் இருப்பதில்லை. எனவே, இனத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்து, ஓர் இனத்திற்குக் கூடுதல் அதிகாரம் அளிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. நாட்டில் அனைத்துச் சமூகங்களும் சம உரிமைகளுடன் வாழ்வதே இதற்குத் தீர்வாகும்.
இன வேறுபாடுகளைப் போலவே, மத வேறுபாடுகளும் நாட்டின் அழிவுக்கே வழிவகுக்கும். அதுபோன்ற பிளவுக்குக் காரணமாக இருப்பவர்கள், நாட்டின் பிரிவினையை ஆதரிக்கின்றனர். நாம் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்.
கொழும்பிலும் நாட்டின் தென்பகுதியிலும் சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதற்கு திரிகோணமலை மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் உன்னத கலாசாரத்தைப் பெற்றுள்ளன. உங்கள் அண்டை வீட்டார் மீது நம்பிக்கை வைத்து வாழுங்கள், நாட்டை விட்டு வெளியேறாதீர்கள் என்று உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. அமைப்பைத் திருப்புவதற்கு சர்வதேச நாடுகள் முயற்சி செய்கின்றன. நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஐ.நா. சாசனம் அனுமதிக்காது. எனது அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அடிப்படை ஆதாரமற்றவை. எங்களை விமர்சிப்பவர்கள் இலங்கைக்கு நேரில் வந்து பார்வையிடட்டும். மறுசீரமைப்பும் வளர்ச்சிப் பணிகளுமே அவதூறுப் பிரசாரத்துக்கு சரியான பதிலாக இருக்கும்.
இலங்கை, அணிசாரா வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும். இது எங்கள் நாட்டின் சுதந்திரத்துக்கு அவசியம். ஐ.நா. சாசனத்தையும் இலங்கை ஆதரிக்கும் என்றார் அவர்.
இதுவரை கூறி வந்ததற்கு முற்றிலும் நேர் மாறாக ராஜபக்சே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சேவின் இந்தப் பேச்சுக்கு இதுவரை இந்திய அரசு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications