டெல்லியைவிட ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்: உமர் அப்துல்லா
அஜ்மீர்: தலைநகர் டெல்லியைவிட ஜம்மு காஷ்மீரில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது தந்தை பரூக் அப்துல்லாவுடன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு இன்று வந்தார்.
அப்போது உமர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீரில் பெண்கள் இசைக்குழுவுக்கு மிரட்டல் விடுத்த சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இசைக்குழுவினரை பயப்படாமல் தங்கள் பணியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
தலைநகர் டெல்லியுடன் ஒப்பிடுகையில் ஜம்மு காஷமீர் பெண்களுக்கு பாதுகாப்பானது. இங்கே பெண்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கலாம். மேலும் பெண் சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தில் சுதந்திரமாக உலா வருகின்றனர். முப்தி பஷிருத்தின் அகமது பெண்கள் இசைக்குழுவை மிரட்டவில்லை. பெண்கள் இசை்குழு இஸ்லாாத்திற்கு எதிரானது என்று அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இசைக்குழு பெண்களை மிரட்டிய 4 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது நபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர் என்றார்.
டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பானதில்லை என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சிதே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.