5 தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை- உரிமைக் குழு நடவடிக்கைக்குப் பரிந்துரை
சென்னை: சட்டசபையில் இன்று அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் மீது கடும் தாக்குதகல் தொடுத்த ஐந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று இந்த விவகாரத்தை உரிமைக் குழு பரிசீலனைக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார்.
தமிழக சட்டசபையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ஒரு சண்டை நடந்தது. அதில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒன்றாக திரண்டு சென்று அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனை அடித்து வெளுத்து விட்டனர். சட்டசபையே இதனால் பரபரப்பாகிப் போனது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அத்தனை தேமுதிக எம்.எல்.ஏக்களையும் அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றினார் சபாநாயகர் தனபால்.
அதன் பின்னர் அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், அவையின் நடவடிக்கைளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இன்று தேமுதிக உறுப்பினர்கள் நடந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக உறுப்பினர்கள் பார்த்தசாரதி, வி.சி.சந்திரகுமார், வெங்கடேசன், முத்துக்குமார், பார்த்திபன் ஆகியோர் மிகவும் மோசமான முறையில் அவையின் உரிமையை மீறும் வகையில்நடந்து கொண்டுள்ளனர். எனவே இவர்கள் மீது உரிமைக் குழு விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத் தலைவருக்குப் பரிந்துரைக்கிறேன் என்றார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.