ஹெலிகாப்டர் ஊழல்: பிரணாப், எம்.கே.நாராயணன் தொடர்புகள் விசாரிக்கப்படுமா?
அவர் நிதியமைச்சராக இருந்தபோது இவ்வளவு விலை கொடுத்து இந்த ஹெலிகாப்டர்களை வாங்க வேண்டுமா என்று பின்னர் கேள்வி எழுப்பி இருந்தாலும், முன்பு பாதுகாப்பு அமைச்சராக அவர் இருந்தபோது தான் இந்த 12 ஹெலிகாப்டர்களை வாங்க அனுமதி தந்துள்ளார்.
இது நடந்தது 2005ம் ஆண்டு. அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தது பிரணாப் முகர்ஜி, விமானப் படைத் தளபதியாக இருந்தது எஸ்.பி.தியாகி, கருப்புப் பூனைப் படையின் தலைவராக இருந்தது பி.வி. வான்சோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தது எம்.கே.நாராயணன்.
கருப்புப் பூனைப் படையின் கோரிக்கையை ஏற்றுத் தான் இந்த ஹெலிகாப்டர்களை விமானப் படைக்கு வாங்க மத்திய அரசு அனுமதி தந்தது. இந்த அனுமதி தரப்பட்டதில் மேலே சொன்ன 4 பேருக்குமே பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் கைமாறிய ரூ. 470 கோடி லஞ்சம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், இதில் பிரணாபையும் நாராயணனையும் வான்சோவையும் விசாரிக்க முடியாது. காரணம், ஒருவர் ஜனாதிபதி, நாராயணன் மேற்கு வங்க கவர்னர், வான்சோ கோவா கவர்னராக உள்ளனர்.
பாஜக ஆட்சிக்கும் தொடர்பு:
அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் இந்த ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பித்ததோடு, டெண்டரும் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்போது இத்தாலிய ஹெலிகாப்டருக்கு சாதகமாக டெண்டர்கள் திருத்தப்பட்டதில் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. பிரதமராக இருந்த வாஜ்பாயை சந்தித்து டெண்டரில் திருத்தம் கொண்டு வரச் செய்தவர் பிரிஜேஷ் தான். இது நடந்தது 2003ம் ஆண்டு.
இதையடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு டெண்டர்கள் விடப்பட்டதில் 3 நிறுவனங்கள் போட்டியிட, கடைசியில் அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி பாதுகாப்புத்துறைக்கான கேபினட் கமிட்டி கூடி, இந்த ஹெலிகாப்டர்களுக்கு ஒப்புதல் தந்துள்ளது.
பாஜக ஆட்சியில் தான் டெண்டர் திருத்தப்பட்டது-ஜஸ்வந்த்:
இந்த விவகாரத்தில் விரைவில் கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸை முடக்க பாஜக தயாராகி வரும் நிலையில், சேம் சைட் கோல் போட்டு பாஜகவை கலங்கடித்துள்ளார் அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, நிதித்துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங்.
அவர் கூறுகையில், அகஸ்டாவெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர்களுக்கு சாதகமாக டெண்டர் திருத்தப்பட்டது பாஜக ஆட்சியில் பிரிஜேஷ் மிஸ்ராவால் தான். இதனால் முன்னாள் விமானப் படைத் தளபதி மீது ஒட்டுமொத்தமாக பழியைப் போடுவது தவறு. விரிவான விசாரணை நடத்தினால் தான் முழு விவரமும் வெளியே வரும். அதுவரை யாரையும் குற்றம் சாட்டுவது சரியல்ல என்றார்.
ஜஸ்வந்த் சிங்கின் இந்தப் பேச்சால் பாஜக கலங்கிப் போயுள்ளது.