அவரை எனக்கு தெரியும்… ஆனால் பேரத்தில் தொடர்பில்லை: சஞ்சீவ் ஜூலி தியாகி
டெல்லி: 2010 ஆம் ஆண்டு நடந்த பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்ட்டர் பேரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி தியாகியின் சகோதரரும்,இத்தாலிய விசாரணை அதிகாரிகளால் இந்த பேரத்தில் முக்கிய தொடர்பாளராக கூறப்பட்டுள்ள "சஞ்சீவ் ஜூலி தியாகி" தெரிவித்துள்ளார்.
விவிஐபிகளுக்காக ரூ 3600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டது சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி தியாகியின் சகோதர் "சஞ்சீவ் ஜூலி தியாகி" என்பவர் முக்கிய சந்தேகத்துக்கிடமானவர்களில் ஒருவராக இத்தாலிய கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சஞ்சீவ் ஜூலி தியாகி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"வியாபாரத்தில் தொடர்பு உண்டு ,பேரத்தில் தொடர்பு இல்லை. மொத்த கதையும் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்தின் இடைத்தரகர் கூடோ ஹஸ்கியால் (Guido Haschke) புனையப்பட்டது என்று கூறினார்.
எஸ்.பி. தியாகி பதவியில் இருந்த காலத்தில் ஒரு போதும் என்அலுவலகத்துக்கு வரவில்லை. இது சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்து விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் இந்த விவகாரத்தில் நான் தினசரி புகார்கள் என்ற பெயரால் கற்பழிக்கப்படுகிறேன்.
ஃபின் மெக்கானிக்காவின் துணை நிறுவனங்களான அன்சால்டோ எனர்ஜியா மற்றும் அன்சால்டோஎஸ்.டி.எஸ்.ஆகியவற்றுடன் எனக்கு தொடர்பு இருந்தது உண்மைதான். ஆனால் ஹெலிகாப்டர் வாங்குவதைப்பற்றி ஒரு போதும் முன்னாள் விமானப்படை தளபதியுடன் விவாதிக்கவில்லை.
கூடோஹஸ்கியின் பிஸினெஸ் பார்ட்னர் கார்லோ கெரோசாவை பல வருடங்களாகத் எனக்குத் தெரியும். அவர் மூலம்தான் கூடோஹஸ்கியை சந்தித்தேன்.
எனக்கு சுவிஸ் வங்கி கணக்கோ அல்லது கிரெடிட் கார்டோ கிடையாது. இந்த பண பேர விவகாரத்தில் புகாரில் சிக்கியுள்ள டெல்லி வழக்கறிஞர் கெளதம் கெய்தானுடன் எந்த வியாபாரத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரை நான் அறிவேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கூடோ ஹஸ்கி பணத்தை சுருட்டிக்கொள்ள தன்னைப்பற்றி இப்படி கதை கட்டிவிடுவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications