இந்த வயதில் இப்படிக் கஷ்டப்படனுமா.. வைகோவிடம் கரிசனத்துடன் கேட்ட ஜெயலலிதா
சென்னை: இந்த வயதில் இப்படி நடந்து கஷ்டப்படனுமா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், முதல்வர் ஜெயலலிதா கரிசனத்துடன் கேட்டதைப் பார்த்து மதிமுக தொண்டர்கள் நெகிழ்ந்து போய் விட்டனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மது அரக்கனை ஒழிக்கக் கோரி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார். இரு தலைவர்களும் பேசிய பேச்சு அங்கிருந்தவர்களை உருக வைத்து விட்டதாம்..

மொத்தம் பேசியது 7 நிமிடம்
வைகோவிடம், ஜெயலலிதா கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் பேசியுள்ளார். நீண்ட காலமாக பார்க்காமல் போன சகோதரியும், சகோதரனும் சந்தித்துப் பேசினால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட பாசப் பேச்சாக அது அமைந்தது.

அம்மா எப்படி இருக்காங்க
வைகோவிடம், பேசிய முதல்வர் ஜெயலலிதா, அம்மா எப்படி இருக்காங்க, மனைவி, குழந்தைங்க எப்படி இருக்காங்க என்று பாசத்துடன் கேட்டாராம். அதற்கு அனைவரும் நன்றாக இருப்பதாக வைகோ சொன்னாராம்.

சாப்பிட்டுத்தான் போகனும்
அதன் பின்னர் எங்க ஊருக்கு வந்திருக்கீங்க.வந்து என் வீட்டில் சாப்பிட்டுச் செல்லுங்கள் என்று ஜெயலலிதா அழைத்தாராம். அதற்கு வைகோ, இல்லை, எனது தொண்டர்கள் வேறு ஏற்பாடு செய்து விட்டனர் என்று பதிலளித்தாராம்.

இந்த வயதில் ஏன் இப்படிக் கஷ்டப்படனும்
அதன் பின்னர், இந்த வயசில் ஏன் இப்படி நடந்து கஷ்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டபோது அனைவரும் நெகிழ்ந்து போய் விட்டனராம்.

மது விலக்கை அமல்படுத்துங்கள்
ஜெயலலிதாவுடன் பேசிய வைகோ ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே வைத்தாராம். அதாவது தமிழகத்தி்ல் முழு மது விலக்கை அமல்படுத்துங்கள் என்பது மட்டுமே அந்தக் கோரிக்கை. நடைப்பயணம் வெற்றி பெற பின்னர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தாராம்.

நாகரீகமான சந்திப்பு
ஜெயலலிதா பின்னர் கிளம்பிச் சென்றார். அதன் பின்னர் வைகோ கூறுகையில் இது மிகவும் நாகரீகமான சந்திப்பு. மகிழ்ச்சி என்று தெரிவித்தார். அதேபோல மதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
இந்த சந்திப்பின்போது மல்லை சத்யா, மின்னல் முகம்மது அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications