ஜெ.வால் அடிக்கல் நாட்டப்பட்டு அவரது கையாலையே மூடுவிழா கண்ட ஸ்டெர்லைட் ஆலை!
தூத்துக்குடி: மக்களால் வெறுக்கப்பட்டு, வைகோ உள்ளிட்டோரின் தொடர் போராட்டத்தால் பெரும் சர்ச்சைக்குள்ளான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முதல்வர் ஜெயலலிதாவால் 1994ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அவரது அரசாலேயே மூடப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளான தனியார் ஆலையாக ஸ்டெர்லைட் திகழ்கிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோதான் இந்த ஆலையை மூடுவது தொடர்பான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வந்தார். அதுகுறித்த ஒரு பார்வை...
94ல் ஜெ. கையால் அடிக்கல்
தூத்துக்குடியில் 1994ம் ஆண்டு ஆலைக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 1995ம் ஆண்டிலிருந்து ரூ.1500 கோடி முதலீட்டில் நிர்மானிக்கப்பட்ட ஆலை சிப்காட்டிற்கு இடம் பெயர்ந்தது. அதே ஆணடில் உற்பத்தியை தொடங்கியது.
2வது பெரிய நிறுவனம்
முதன்மை பொருளாக தாமிரமும், காப்பர் கேதோடு, பாஸ்பாரிக் அமிலம், சல்பியூரிக், ஜிப்சம், பெர்ரோசாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம் மூலம் பொருட்கள் இறக்குமதி, துறைமுகத்தின் இரண்டாவது பெரிய இறக்குமதி நிறுவனம்.
நேரடியாக 6000 - மறைமுகமாக 10,000 தொழிலாளர்கள்
4 ஷிப்டுகளில் நேரடியாக 6 ஆயிரம் பேரும், மறைமுகமாக 10 ஆயிரம் பேரும் பணியாற்றுகின்றனர்.
அரசுக்கு ஆண்டு வருவாய் ரூ.1600 கோடி
அரசுக்கு ஆண்டு வருவாயாக ரூ.1600 கோடி வருகிறது. ஆலையின் உற்பத்தி பொருளை நம்பி தமிழகம் முழுவதும் 200 மேற்பட்ட சிறிய தொழிற்சாலைகள்.
1996ல் முதல் வழக்கு
தூய சூழலுக்கான தேசிய அமைப்பின் என்டிசிஇ சார்பில் 1996ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
97ல் நடைபயணம் போன வைகோ
1997ம் ஆண்டில் மதிமுக பொது செயலாளர் வைகோ ஆலையை மூட ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் சென்றார். சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
2010ல் முதல் பலி
2010ல் ஆலையில் வாயு கசிந்ததால் ஓப்பந்த தொழிலாளி ஓருவர் இறந்தார். இதையடுதது பிரச்சனை பெரிதானது. 2010 செப்டம்பர் 28ல் சென்னை உயர் நீதிமன்றம் காற்று, தண்ணீர் ஆகியவற்றை மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டது.
2010ல் உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரியது.
சுப்ரீம் கோர்ட் விதித்த ஸ்டே
2010 உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 2012ல் வழக்கு விசாரணை வைகோ வாதிட்டார்.
விஷ வாயு கசிவு - கலெக்டர் நோட்டீஸ்
2013 மார்ச் 23ம் தேதி அதிகாலை திடீரென விசவாயு கசிந்ததை மாசு கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்தது. 24ம் தேதி கலெக்டர் நோட்டீஸ் பிறப்பித்தார்.
28ம் தேதி முற்றுகைப் போராட்டம் -30ம் தேதி சீல் வைப்பு
28ம் தேதி வைகோ, நல்லக்கண்ணு தலைமையில் முற்றுகை போராட்டம். 29ம் தேதி நள்ளிரவு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவு. 30ம் தேதி மூடல் உத்தரவு ஆலை நுழைவு வாயிலில் ஓட்டப்பட்டது.