ஹைதராபாத்தில் ஒரு 'நவீன நல்ல தங்காள்': குடிபோதையில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றார்
ஹைதராபாத்: குடிபோதையில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றினர்.
பட்டினியால் குழந்தைகள் கதறுவதை காண சகிக்காமல், அவர்களை கிணற்றில் தூக்கிப்போட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட நல்ல தங்காள் கதையை சிலர் அறிந்திருக்கலாம்; பலர் அறியாமலும் இருக்கலாம்.
அதே போன்றதொரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நேற்று நிகழ்ந்துள்ளது. இது வறுமையினால் வந்த வினையல்ல; போதையினால் ஏற்பட்ட விளைவு.
ஆந்திர மாநிலம், நவாப் பேட்டை மண்டலம், ரேகுலாசவுகாபூரை சேர்ந்த ஒரு பெண், நேற்று மாலை 4 மணியளவில் ஷில்பா (7), அக்னி (6), சரண் (2) ஆகிய தனது 3 குழந்தைகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்தாள்.
இதை கண்ட கிராமவாசிகள் கிணற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பிணங்களாக தான் அவர்களை மீட்க முடிந்தது. 3 பச்சிளம் தளிர்களின் மரணத்திற்கு காரணமான அந்த பெண் மட்டும் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
அந்த பெண்ணின் கணவர் டிரைவராக வேலை செய்வதாகவும், அவர்களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போன அவர், மனக் குழப்பத்தில் இந்த மாபாதக வேலையை செய்திருக்கக் கூடும். கிணற்றில் குழந்தைகளை வீசிய போதும் அவர் முழுபோதையில் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.