லொக்கு.. லொக்கு..... ஸாரி, நான் இருமலை, அந்த எலிதான் இருமுச்சு!
நியூயார்க்: மனிதர்களைப் போலவே எலிகளும் கூட லொக் லொக் என்று இருமுமாம். இதை ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.
இருமலுக்கான மருந்து கண்டுபிடிப்பதில் எலிகளை வைத்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்த எலி இருமல் கொடுத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் விரும்பும் ஒரு பிராணி எது என்றுகேட்டால் அது எலி என்று தாராளமாக கை காட்டலாம். பாவும் அப்பிராணியான அந்த எலிகளைத்தான் போட்டு எத்தனை வதைகள், ஆய்வுகள்.. இருந்தாலும் மனித உடலில் தோன்றும் எத்தனயோ நோய்களுக்கான மருந்துகளை இந்த எலிகளை வைத்துத்தான் சோதிக்கின்றனர்.
இந்த நிலையில் எலியிடமிருந்து புதிய விஷயம் ஒன்றை விஞ்ஞானிகள் அறிந்து ஆச்சரியமடைந்துள்ளனர். அதாவது மனிதர்களைப் போலவே எலிகளும் இருமுகின்றன என்பதுதான் அது. மேலும் மனிதர்கள் வலி ஏற்பட்டால் எப்படி முணகுவார்களோ அதேபோல எலிகளும் முனகுகின்றனவாம்.
சீனாவைச் சேர்ந்த குவாங்ஷோ மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள்தான் எலிகள் இருமுவதைக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளனர். இதற்காக 40 எலிகளை சோதனைக்குட்படுத்தினர். பிறகு அந்த எலிகளுக்கு அருகே அதாவது மூக்குக்கு அருகே மிளகாய்ப் பொடியை வைத்தனர். அதை நுகர்ந்த எலிகள் அச் என்று தும்மியும், இருமியும் உள்ளன.
நம்மில் சில் படு சவுண்டாக இருமுவார்கள், தும்முவார்கள். அதாவது வாஷ் பேசின் உடைந்து சிதறும் அளவுக்கு தும்முபவர்கள் நிறையப் பேர் நம்மில் உண்டு. ஆனால் இந்த எலிகள் பாவம், அப்படியெல்லாம் தும்மவில்லையாம், இருமில்லையாம். மாறாக மிக மிக நுன்னிய சத்தமே வெளி வந்துள்ளது.
மேலும் நாம் மிளகாய்ப் பொடியை நுகர்நாந்தால் எப்படி மூக்கு கஷ்டப்பட்டு அதை விரல்களால் தேய் தேய் என்று தேய்ப்போமோ அதேபோல இந்த எலிகளுக்கும் கஷ்டமாகி மூக்கை போட்டு தரையில் தேய்த்தனவாம்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பை வைத்து இருமலுக்கான மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளனராம்.