வரும் நவம்பரில் லோக்சபா தேர்தல் வரும்: பா.ஜ.க திட்டவட்டம்
மும்பை: " லோக்சபா தேர்தல், வரும், நவம்பரில் நடப்பதற்கு, அதிக வாய்ப்புள்ளது. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலை சந்திக்க, தயாராக வேண்டும், '' என, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங், மகாராஷ்டிராவில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, நேற்று பார்வையிட்டார். இதன்பின், மும்பையில், கட்சி நிர்வாகிகளிடையே, அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில், கடந்த, 15 ஆண்டுகளாக, நாம் ஆட்சியில் இல்லை. "தேர்தல்களில், தொடர்ந்து தோல்வி அடையும் கட்சிகள், இனிமேல், ஆட்சிக்கு வராது' என, மக்கள், கருத துவங்கி விடுவர். இது, அபாயகரமான போக்கு. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நம், நடவடிக்கைகள் அமைய வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அனைத்து துறைகளிலும், தோல்வி அடைந்து விட்டது.
எந்த நேரத்திலும், மத்திய அரசு, கவிழலாம்.லோக்சபாவுக்கு, எப்போது வேண்டுமானாலும், தேர்தல் நடக்கலாம். வரும், நவம்பரில், தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தலை சந்திக்க, தொண்டர்கள், தயாராக இருக்க வேண்டும்.குஜராத், போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அமீத் ஷாவுக்கு, கட்சியில், பொதுச் செயலர் பதவி கொடுக்கப்பட்டதற்கு, விமர்சனங்கள் வந்து உள்ளன.அவர் மீதான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
விசாரணை முடியாத நிலையில், ஒருவரை குற்றவாளி என, கூற முடியாது. "கட்சியின், பார்லிமென்ட் குழுவில், மகாராஷ்டிரா முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகானை சேர்க்காதது ஏன்?' என்றும், சிலர், கேள்வி எழுப்புகின்றனர். சிவ்ராஜ் சிங் சவுகானின், கட்சிப் பணி, சிறப்பானது என்பதில், மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில், பார்லிமென்ட் குழுவில், ஒரு காலியிடம் தான், இருந்தது. எனவே, சிவ்ராஜ் சிங் சவுகானை, அந்த குழுவில் சேர்க்க முடியவில்லை' , என இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.
இதே கருத்தை சில நாட்களுக்கு முன்பு, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.