ஸ்டெர்லைட் ஆலை:பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு பிறகே திறப்பது பற்றி முடிவு!
2010-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக ரூ100 கோடியை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பானது அண்மையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவைக் கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் நேற்று தீர்ப்பை நீதிபதி ஏ.கே. பட்நாயக் வழங்கிய பின்னர் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மாசு வெளியாவதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.அதற்கு பதிலளித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் தீர்ப்பளித்துள்ளேன். சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால், தொடர்ந்து உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மனுக்களை தாக்கல் செய்து வழக்காடிய உங்களையும், இதர மனுதாரர்களையும் தீர்ப்பில் பாராட்டியிருக்கிறேன் என்று கூறினார்.
இதேபோல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரப்பும், ஆலையை மூட தாங்கள் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டும்தான் நிராகரித்து இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு எனில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று கூறுகிறது.
தற்போது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் ஸ்டெர்லைட் நிறுவனம் முறையீடு செய்திருக்கிறது. இந்த முறையீட்டின் மீது வரும் ஏப்ரல் 9-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது. அதன் பின்னரே ஸ்டெர்லைட் ஆலை திறப்பது பற்றி தெரியவரும். அதாவது இன்னும் ஒருவார காலத்துக்காவது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது.