தினபூமி ஆசிரியரை கடத்திய 30 போலீசாரை உடனே கைது செய்க: பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜூ காட்டம்!!

கடந்த 2010-ம் ஆண்டு தினபூமி நாளிதழில் மதுரை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கிரானைட் வெட்டி எடுக்கப்படுவதால் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக செய்திக் கட்டுரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வந்தது.இக்கட்டுரை வெளியிட்டதற்காக தினபூமி நாளிதழின் ஆசிரியர் மணிமாறனும் அவரது மகனும் 2010ஆம் ஆண்டு ஜுலை 21-ந் தேதி எந்தவித வாரண்ட்டும் இல்லாமல் 'கடத்தப்பட்டு' பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மணிமாறன் தாமும் தமது மகனும் கைது செய்யப்பட்டது பற்றி இந்திய பிரஸ் கவுன்சிலில் முறையீடு செய்தார். தினபூமியில் வெளியான கட்டுரையின் அடிப்படையில்தான் தற்போது அந்த பல்லாயிரம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரிகைகள் தொடர்பான மனுக்கள் மீது ஹைதராபாத்தில் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான மார்க்கண்டேய கட்ஜூ இன்று விசாரித்தார். அதில் தினபூமி ஆசிரியர் மணிமாறன் கைது தொடர்பான மனுவும் இடம்பெற்றிருந்தது. மணிமாறனின் புகார் மனுவை விசாரித்த மார்க்கண்டேய கட்ஜூ, அவரை சட்டவிரோதமாகக் கடத்தி சிறையில் அடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 30 போலீசாரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், சம்பவம் நடந்தது திமுக ஆட்சிக் காலத்தில் என்றார். இதனால் கோபமடைந்த மார்க்கண்டேய கட்ஜூ, எங்களுக்கு யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பதெல்லாம் கவலை இல்லை. தற்போது ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார். அவர் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறினார்.
மேலும் "இன்னமும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இங்கே நடப்பதாக போலீசார் நினைக்கின்றனரா? இதுதான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் என்றும் கொந்தளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications