தமிழகத்தில் அமைதியாக முதல் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்!
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான முதல்கட்டத் தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக இன்றும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 12-ந் தேதியும், 3-ம் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 27-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த கூட்டுறவு சங்க தேர்தலை தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.
முதல் கட்ட தேர்தல் 4735 சங்கங்களுக்கும் நடைபெற வேண்டும். ஆனால் 4325 சங்கங்களில் போட்டியில்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் 410 சங்கங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் முறைகேடு புகார்கள் வந்துள்ளன. பொதுவாக கூட்டுறவு சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் உதயநத்தத்தில் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மற்ற வேட்பாளர்களை தேர்தலில் வாக்களிக்க அதிமுகவினர் அனுமதிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவை மத்திய சிறைச்சாலை அருகில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போடுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.