நாமக்கலில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியதால், கம்பி எண்ணும் 3 ஆசிரியர்கள்
நாமக்கல்: பிளஸ்-2 இயற்பியல் தேர்வில் பிட்' அடிக்க உதவிய பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. இதில் 11-ந் தேதி நடைபெற்ற இயற்பியல் தேர்வின் போது நாமக்கல் அருகே உள்ள பொம்மகுட்டை மேட்டில் செயல்பட்டு வரும் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முறைகேடு நடைபெற்றதை பறக்கும் படை கண்டுபிடித்தது.
தேர்வு மையம் ரத்து:
ஒரு மார்க் கேள்விகளுக்கான விடைகளை அட்டையில் எழுதி மாணவர்களுக்கு காட்டியதை இணை இயக்குனர் கார்மேகம் தலைமையிலான பறக்கும் படையினர் கண்டுபிடித்து அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
விசாரணை:
இதனையடுத்து, இந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இந்த முறைகேடு குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி நாமக்கல் மாவட்ட போலீசில் பதிவு தபால் மூலம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் கைது:
விசாரணைக்குப் பிறகு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான சேந்தமங்கலம் காந்திபுரத்தை சேர்ந்த யுவராஜ் (33), அலுவலக உதவியாளர் செல்வகுமார், காவலாளி புதன்சந்தை லட்சுமி நகரை சேர்ந்த முருகேசன் (41) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாமக்கல் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, ‘பிளஸ்-2 இயற்பியல் தேர்வின் போது முறைகேடு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுக்கு சென்றார். அப்போது பள்ளியின் நுழைவுவாயிலில் உள்புறம் தாழிடப்பட்டிருந்ததை அடுத்து சப்தம் போட்டு அழைத்ததன் பேரில் காவலாளி முருகேசன் வந்து கதவை திறந்தார்.
இது தொடர்பாக காவலாளி சரிவரப் பதில் அளிக்காததுடன், அவரிடம் இருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கார்மேகம் தேர்வு அறைகளின் பின்பக்கம் சோதனையிட்ட போது 5 அடிஉயரம், 1.5 அடி அகலமும் கொண்ட அட்டையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகள் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த அலுவலக உதவியாளர் செல்வகுமாரிடம் விசாரித்ததில் பள்ளி நிர்வாகியின் அறிவுறுத்தலின் பேரில் இதை செய்ததாகவும், அந்த அட்டையை உடற்கல்வி ஆசிரியர் யுவராஜுவிடம் ஒப்படைத்ததையும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கார்மேகம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து தேர்வு நடந்து கொண்டு இருந்த போது வினாக்கள் வெளியேறியது குறித்தும், விடைகள் தயார் செய்யப்பட்டது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க தேர்வுகள் துறை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக அந்த பள்ளியின் காவலாளி முருகேசன், அலுவலக உதவியாளர் செல்வக்குமார், உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். பிளஸ்-2 இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்த போதே கேட்கப்பட்டுள்ள வினாக்களை பெற்று அதற்குரிய விடைகளை எழுதி மாணவர்கள் காப்பியடிக்க உதவிட வேண்டும் என்றால் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர்களின் துணையின்றி செய்திருக்க முடியாது.
தவிர பள்ளியின் நிர்வாகத்தின் அனுமதியை பெறாமல் ஆசிரியர்கள், ஊழியர்களே நேரடியாக இந்த முறைகேட்டை செய்திருக்கவும் வாய்ப்பில்லை. எனவே இந்த மோசடி தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.