நிலக்கரி ஊழல்: சிபிஐ அறிக்கையில் திருத்தம் செய்த சட்ட அமைச்சர்- இன்னொரு நெருக்கடியில் மத்திய அரசு!
தகுதி அற்ற பல நிறுவனங்களுக்கு நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமம் வழங்கப்பட்டால் ரூ1.86 லட்சம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று ஒரு பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோரின் தலைகள் உருண்டன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலைவிட பெரிதாக புயலைக் கிளப்பிய நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட சிபிஐ தமது இடைக்கால விசாரணை அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது.
ஆனால் கடந்த மார்ச் மாதம் சிபிஐ அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய அரசால் அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி மீண்டும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் சிபிஐ அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது பிரதமர் அலுவலக அதிகாரிகளும் உடன் இருந்துள்ளனர். சிபிஐ தாக்கல் செய்ய இருந்த அறிக்கையில் பல திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் பினன்ரே அந்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் புயலைக் கிளப்பி இருக்கின்றன.
இந்நிலையில் மத்திய அரசு திருத்தம் செய்தது உண்மைதான் என்று சிபிஐ தரப்பிலேயே ஒரு மனு தாக்கல் செய்யப்படக் கூடும் என்றும் சில தகவல்கள் வெளியாகி டெல்லி அரசியலை பரபரப்பாக்கி இருக்கின்றன..
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பாஜக, சிபிஐ அமைப்பை மத்திய அரசு எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். இதனால் சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் ஏப்ரல் 22-ந் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிபிஐ அறிக்கையை திருத்தம் செய்ததில் உடந்தையாக இருந்த சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.