நெல்லையில் மாமூல் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டைய்யாவை மடக்கிப் பிடித்த துணை கமிஷனர்
நெல்லை: நெல்லையில் நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை வழிமறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட எஸ்ஐ, ஏட்டு ஆகியோரை துணை கமிஷனர் அதிரடியாக மடக்கிப் பிடித்தார்.
நெல்லை மாநகர துணை கமிஷனர் ராஜராஜன் நேற்று இரவு மாநகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். இரவு 10 மணி அளவில் விஎம் சத்திரம் சீனிவாசநகர் அருகே வந்தபோது அங்கே ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு எஸ்ஐ மற்றும் ஏட்டு ஆகியோர் அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து மாமூல் வசூலித்து கொண்டிருந்தனர். இதனை அப்பகுதியில் மறைந்திருந்து துணை கமிஷனர் பார்த்துக் கொண்டிருந்தார். அதனை கவனிக்காத அவர்கள் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மணல் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி மாமூல் வசூலிப்பதில் மும்முரமாக இருந்தனர்.
அப்போது திடீரென துணை கமிஷனர் அவர்களை பிடிப்பதற்காக சென்றார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த துணை கமிஷனர் அவர்களிடம் இருந்த மாமூல் பணத்தை பறிமுதல் செய்தார். பின்னர் எச்சரிக்கை செய்து கமிஷனர் அலுவலகத்தில் வந்து ரிப்போர்ட் கொடுக்குமாறு கூறினார். மேலும் இது தொடர்பாக ஐகிரவுண்ட் காவல் நிலைய
இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு விசாரித்தார். மாமூல் வசூலில் ஈடுபட்ட எஸ்ஐ, ஏட்டு ஆகியோருக்கு நீதிமன்ற பீட் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் காவல் நிலைய எல்லையை மீறி பெருமாள்புரம் காவல் நிலைய பகுதியில் வசூல் செய்தது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.