தூத்துக்குடியில் திருநங்கைகள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்ககைகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அது போன்று பிச்சையும் எடுக்காமல் சுயதொழில் மூலமாக வருவாய் ஈட்டி பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளில் மற்றொரு பிரிவினர் திருநங்கைகளை கடத்திச் சென்று சென்னை போன்ற நகரங்களில் பாலியல் தொழிலில் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் திருநங்கைகள் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
திருநங்கைகளை கடத்தி செல்லும் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை ரங்கீலா ஜீவன், சென்னையைச் சேர்ந்த திருநங்கை அருணா, திருச்சியைச் சேர்ந்த திருநங்கை மோகனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கலெக்டரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் திருநங்கைகள் விஜி, பூமிகா தலைமையில் ஏராளமான திருநங்கைகள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.