நாடாளுமன்றத் தேர்தல்: குஜராத்தைவிட்டு ம.பிக்கு 'புலம்' பெயருகிறார் அத்வானி!
குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது பாஜக. ஆனால் இதை மூத்த பாஜக தலைவரான எல்.கே.அத்வானி விரும்பவில்லை. இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் மீண்டும் நிற்க வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மோடியின் ஆதரவாளர்கள் ஏதாவது 'உள்ளடி' வேலைகளில் ஈடுபட நேரிடும் என்பதால் மத்திய பிரதேச மாநிலத்தின் தொகுதி ஒன்றில் போட்டியிடுமாறும் அத்வானியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச முதல்வராக உள்ள சிவ்ராஜ் சிங் செளகானை பாஜகவின் பார்லிமென்ட் குழுவில் நியமிக்க ராஜ்நாத் சிங்கிடம் அத்வானி பரிந்துரைத்திருந்தார். ஆனால் இதை ராஜ்நாத்சிங் நிராகரித்து மோடியை மட்டும் பார்லிமென்ட் குழுவில் இடம்பெறச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கட்சித் தலைவராகவும் அடுத்த மத்திய அரசையும் தமது தலைமையில் அமைக்க அத்வானி ஒப்புக் கொண்டால் அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலி தள் மூத்த தலைவர் நரேஷ் குஜ்ரால் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜகவில் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பிரச்சனை வெடித்துள்ளது தொடர்பாக கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அத்வானியோ, பிரதமர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மட்டும் பதிலளித்துள்ளார்.