பெங்களூர் குண்டுவெடிப்பு: மதுரையில் கிச்சன் புகாரி கைது; மேலும் இருவர் சென்னையில் கைது
சென்னை & மதுரை: பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கில் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி இன்று காலை மதுரையில் கைது செய்யப்பட்டார். அதே போல மேலப்பாளையத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தென்காசியைச் சேர்ந்த முகமது சாலி (27) என்பவரிடமும் காவல்துறையினர் தொடரந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை ர்நாடக போலீசார், தமிழக போலீசார் மற்றும் மத்திய உளவுப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்தி வருகின்றனர்.
பைக் தமிழ்நாடு பதிவு எண் கொண்டதால் தமிழகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வேலூரில் உள்ள ஒரு மெக்கானிக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் சிலரின் பெயரை தெரிவித்தார். மேலும் செல்போன் உரையாடல்கள், எஸ்எம்எஸ்களின் அடிப்படையிலும் பலரை பெங்களூர், தமிழக போலீசாரும், மத்திய உளவுப் பிரிவினரும் கண்காணித்தனர்.
இதில் 5 பேர் மீது சந்தேகம் வந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் 2 பேர் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு பெங்களூர் தனிப்படை போலீசார் சென்னை போலீசாரின் உதவியுடன் பீர் முகமது மற்றும் பஷீர் ஆகிய 2 பேரை சென்னையில் கைது செய்தனர். அவர்கள் இருவரும் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள் இரவோடு இரவாக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கிச்சன் புகாரி மதுரையில் பஸ் நிலையத்தில் கைது..
இந் நிலையில் இன்று காலை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வைத்து அல் உம்மா இயக்க ஆதரவாளரான நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சன் புகாரி தமிழக சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் பெங்களூர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கில் கிச்சன் புகாரி தான் முக்கிய குற்றவாளி என்று கர்நாடக போலீசார் அளித்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இருந்து நெல்லைக்கு செல்லும் வழியில் மதுரை வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர்.
கிச்சன் புகாரி கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று தண்டனைக் காலம் முடிந்த நிலையில், கோவையில் குடியேறி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததார். இவர் கன்னியாகுமரியில் பாஜக செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்திலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசியைச் சேர்ந்த மேலும் ஒருவரிடம் விசாரணை:
மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தென்காசியைச் சேர்ந்த சுலைமான் (23), முகமது சாலி (27) ஆகிய இருவரிடமும் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில், சுலைமானை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். ஆனால் முகமது சாலியிடம் தொடரந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த நிலையில் மதுரையைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஏற்கனவே மதுரையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.