திருப்பதியில், வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி: கோடை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க திருப்பதியில் இன்று முதல் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வியாழக்கிழமைகளில் மட்டும் அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் திருப்பதியில் தர்ம தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். நேற்று 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 39,086 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரத்திலும், ரூ.300 விரைவு தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரத்திலும் ஏழுமலையானை வழிபட்டனர்.
இந்நிலையில், திருப்பதியில் இன்றுமுதல் ஈவ்னிங் பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் பாபிராஜூ, செயல் அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமலை ஏழுமலையானை தரிசிக்க விஐபிக்களுக்கான காலையும், மாலையும் தனியாக பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது. சாதாரணமாக திருமலையில் நாளொன்றுக்கு 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர்.
இப்போது கோடைகாலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் நாளொன்றுக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஈவ்னிங் பிரேக் தரிசனத்தை (வியாழக்கிழமை) தவிர்த்து மற்ற நாள்களில் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்த ரத்து இன்று முதல் மே 30 வரை அமலில் இருக்கும்' என்றனர்.