ரூ5 கோடி கேட்டு பேஸ்புக் நண்பர்களால் கடத்தப்பட்ட சிறுவன் : 4 பேர் சுட்டுக் கொலை
கராச்சி: பாகிஸ்தான் கராச்சி நகரில் வசித்து வரும் முஸ்தபா (13)வுக்கு 24 மணி நேரமும் இண்டர் நெட் தான் உலகமே. பேனா நட்பு போல் 'பேஸ் புக்' மூலமும் முகம் தெரியாத பல புதிய நண்பர்களுடன் பழகி வந்துள்ளான்.
கடந்த 6 மாதங்களாக, பேஸ் புக் நண்பர்களாக இருக்கும் சிலர் முஸ்தபாவை சந்திக்க ‘லைக்' தெரிவித்துள்ளனர். முஸ்தபாவும் அதற்கு சம்மதம் கூறியுள்ளான். சந்திக்கச் சென்ற இடத்தில் அவர்கள் முஸ்தபாவை கடத்திச் சென்று விட்டனர். பின்னர் முஸ்தபா பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டான்.
முஸ்தபாவின் தந்தை கராச்சி சுங்கத்துறையில் உயரதிகாரியாக உள்ளார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், 'முஸ்தபாவை விடுவிக்க தங்களுக்கு ரூ.5 கோடி தர வேண்டும். தவறினால் அவனை கொன்று விடுவோம்' என கூறி மிரட்டியுள்ளனர்.
இக்கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் குறித்து முஸ்தபாவின் தந்தை கராச்சி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் செல்போன் சிக்னலின்படி, கடத்தல்காரர்களின் ரகசிய இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
இன்று அதிகாலை முஸ்தபா கடத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டை முற்றுகையிட்ட போலீசார், கடத்தல்காரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்று சிறுவன் முஸ்தபாவை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து முஸ்தபாவின் தாயார் கூறுகையில், 'பேஸ் புக் போன்ற இணைய தளங்களில் தங்கள் பிள்ளைகள் இணையாதபடி அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற சூழ்நிலையோ அல்லது அதைவிட மோசமான கதியோ உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications