இறங்கி வருகிறார் அத்வானி... மோடியை 4 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக்க சம்மதம்!
டெல்லி , மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதில் பெரும் வெற்றியைப் பெற்றால் அது எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பெரும் பலனைக் கொடுக்கும் என பாஜக தலைமை கருதுகிறது.
இதை அத்வானியிடமும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனராம். மேலும் இந்த சட்டசபைத் தேர்தல்களுக்கான பாஜக பிரசாரக் குழுவை மோடி தலைமையில் அமைக்கவும் பாஜக விரும்புகிறது. இதையடுத்து வேறு வழியின்றி தனது நிலையிலிருந்து அத்வானி இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது.
மோடியை தாராளமாக பிரசாரக் குழுத் தலைவராக நியமியுங்கள். அதேசமயம், பாஜக நாடாளுமன்றக் குழுவின் ஒப்புதலைப் பெற்று அதைச் செய்யுங்கள் என்று அத்வானி கூறியுள்ளாராம். மேலும், தேர்தல் பிரசாரப் பணிகள் முழுவதையும் மோடியிடமே விடாமல் பல்வேறு குழுக்களை அமைத்து அதைச் செய்ய வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங்கிடம் அத்வானி தெரிவித்துள்ளாராம்.
இதையடுத்து அடுத்த முடிவை எடுக்கும் முடிவு ராஜ்நாத் சிங்கிடம் வந்துள்ளது. இந்த வார இறுதியில் கோவாவில் கட்சியின் தேசிய செயற்குழு கூடுகிறது. அப்போது மோடியை பிரசாரக் குழுத் தலைவராக நியமிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் பெற்று அறிவிப்புகளை ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியை நான்கு மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக்க வேண்டும் என்பது நிதின் கத்காரியின் பரிந்துரையாகும். கட்சித் தலைவர் பதவியில் அவர் இருந்தபோது இதைக் கூறினார். மேலும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த கூற்றுக்கு மேலும் வலு கூடியது. இருப்பினும் அத்வானி தற்போது மோடிக்கு முட்டுக்கட்டையாக மாறி வருகிறார்.
மோடியைப் போலவே அத்வானியும் கூட பிரதமர் கனவில் சமீப காலம் வரை இருந்தவர்தான் என்பது நினைவிருக்கலாம்.