குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா நல்லவர்கள்- பிசிசிஐ; மீண்டும் தலைவராகிறார் சீனிவாசன்!
கொல்கத்தா: குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான பெட்டிங் புகார்களுக்கு ஆதாரமில்லை என்று கூறி விட்டது இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்த விசாரணைக் குழு. இதையடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்குத் திரும்புகிறார் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
சீனியின் மருமகன்தான் குருநாத் மெய்யப்பன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர்தான் ராஜ் குந்த்ரா.
இவர்கள் மீதான சூதாட்டத்தில் தொடர்பு என்ற புகார்கள் குறித்து விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட குழு தற்போது இவர்களுக்கும், அந்த புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி விட்டது.
ஸ்ரீசாந்த் தொடங்கி
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கைதானார்கள்.
குருநாத் மீதம் புகார்
இந்த விசாரணையின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரும், சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் மீதும் புகார்கள் எழுந்தன. பல கோடிக்கு அவர் பெட்டிங்கில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ் குந்த்ரா மீதும்
அதேபோல ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா மீதும் பெட்டிங் புகார்கள் எழுந்தன.
சீனிவாசனுக்கு நெருக்கடி
இந்த வழக்கில் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று குரல்கள் வெடித்தன. கிரிக்கெட் வாரியத்திற்குள்ளும் போர் மூண்டது.
டால்மியா ... வாங்கய்யா...!
இதை சமாளிக்க முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவை இடைக்காலத் தலைவராக நியமிப்பதாகவும், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார் சீனிவாசன். மேலும், விசாரணை முடிவடையும் வரை தான் தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பதாகவும் அறிவித்தார்.
குருநாத் - குந்த்ரா நல்லவர்கள்...!
இந்த நிலையில் கமிட்டி விசாரணையில் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள், அவர்களுக்கும் இந்தப் புகார்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளதாம்.
ஆகஸ்ட் 2ம் தேதி ஒப்புதல்
விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 2ம் தேதி கூடும் கிரிக்கெட் வாரிய கமிட்டி கூட்டம் ஏற்று ஒப்புதல் அளிக்கவுள்ளது. அன்றயை தினமே ஐபிஎல் நிர்வாகக் கமிட்டி கூட்டமும் கூடுகிறது.
மீண்டும் தலைவராகிறார் சீனிவாசன்
அறிக்கையில் தனது மருமகன் நல்லவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சீனிவாசன் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளாராம்.
இந்தியா சிமென்ட்ஸும் நல்லதுதானாம்...
இந்த விசாரணையின்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின்மீதான புகாரையும் ஆதாரமில்லை என்று கூறி விட்டதாம் விசாரணைக் கமிட்டி...