தமிழ்நாட்டில் நடமாடும் ஸ்லீப்பர் செல்கள்… அத்வானிக்கு டார்கெட்?
மதுரை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெறும் அரசியல் படுகொலைகள், பாஜக, இந்து முன்னணி தலைவர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் பல படுகொலைகளை அரங்கேற்ற ஆங்காங்கே ஸ்லீப்பர் செல்கள் நடமாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு நெல்லையில் வெடிபொருட்களுடன் தங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரு குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் இருக்கும் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள்.
சேலத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற ஆடிட்டர் ரமேஷ் படுகொலை சம்பவத்திற்கு பின்னர் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுதான் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் பதுங்கியிருந்த கட்டை சாகுல்,ஆட்டோ டிரைவர் அன்வர் பிஸ்மி, முகம்மது சம்சுதீன், குட்டி என்ற நூருல் அமீது ஆகியோர் வெடிமருந்துகளுடன் பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த 17 கிலோ வெடிமருந்தும், தலா 125 கிராம் எடையுள்ள 141 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இந்த டெட்டனேட்டர்கள் அனைத்தும் கல்டெக்ஸ், ரெக்சான் போன்ற பிராண்டட் பொருட்களாகும். இவற்றை தூரத்தில் இருந்தே வெடிக்க வைக்கலாம். இந்த பொருட்கள் மட்டும் வெடித்திருந்தால் அந்த தெருவே காலியாகிருக்கும் என்கின்றனர் போலீசார்.
ஸ்லீப்பர் செல்கள்
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலிட உத்தரவு அதை செய்தோம் என்று மட்டும்தான் கூறி வருகின்றனர். பரவை பாதுஷா,தையல் பஷீர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர் இவர்கள்தான் வெடிமருந்து கொண்டுவர மூலகாரணமாக இருந்தவர்கள்.
அத்வானிக்கு குறி
இந்த வெடிபொருட்கள் எதற்காக இங்கே பதுக்கி வைக்கப்பட்டது. சேலம் வரும் அத்வானியைக் கொல்ல வெடி பொருட்களை பதுக்கினார்களா? அல்லது வேறு எதற்காக இவை இங்கே பதுக்கப்பட்டது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேடப்படும் குற்றவாளிகள்
இதனிடையே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ரத யாத்திரைப் பாதையில், திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி அருகே பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக போலீஸ் அறிவித்துள்ளது.
இவர்களின் படங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியிட்ட போலீஸ் இவர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுப்பட்டி டாக்டருக்கு குறி
இந்த அறிவிப்பினை பேப்பரில் பார்த்த டி.கல்லுப்பட்டியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு தலைவி ஒருவர் கடந்த 24ம் தேதி பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோரை பார்த்ததாக தகவல் கூறியுள்ளார்.
திருமங்கலம் - ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள டி.கல்லுப்பட்டியில் வன்னிவேலம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது செல்லாயி மகளில் சுயஉதவிக்குழுவினர் நடத்தும் கட்டண கழிப்பறை இங்குதான் தீவிரவாதிகள் இருவரும் கடந்த 24ம் தேதி வந்துள்ளனர். இதன் அருகில்தான் டாக்டர் முத்துக்கிருஷ்ணன் நடத்தும் எம்.எஸ்.ஆர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர். அவரை குறிவைத்து தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
படிக்கும் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் டாக்டர் முத்துக்கிருஷ்ணன். அத்வானி, நரேந்திர மோடி ஆகியோருடன் அவருக்கு நெருக்கம் அதிகம் உண்டு. பாஜகாவிலும் இப்போது தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். எனவே அவரது உயிருக்கு குறி வைத்து அதற்கான சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் மேற்கொண்ட சோதனையில் எம்.எஸ்.ஆர் பள்ளி முன்பாக இருந்த சிசிடிவி கேமராவின் வயரும் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டாக்டர் முத்துக்கிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனை முன்பும், பள்ளியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் எதிரியல்ல
இது குறித்து கருத்து கூறியுள்ள டாக்டர் முத்துக்கிருஷ்ணன் நான் விமர்சனம் செய்வது முஸ்லீம் பயங்கரவாதிகளைத்தானே தவிர இஸ்லாம் சகோதரர்களை அல்ல. இந்தப் பகுதியில் நான் பாஜகவில் முக்கிய பிரமுகர் என்பதால் என்னைக்குறிவைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக, இந்து முன்னணி தலைவர்கள் கொல்லப்படுவது கண்டிக்கத் தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை அவர்களே ஒதுக்கி வைக்கவேண்டும் என்றார்.
சைக்கிள் கடையில் விசாரணை
பக்ருதீனும், பிலால் மாலிக்கும் உள்ளூர் காரர்கள் என்று கூறி சைக்கிள் கடை நடத்து பாண்டி என்பவரிடம் விசாரித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பாண்டி அவர்களிடம் எந்தஊர், நீங்கள் யார் என்று கேள்வி கேட்கவே மழுப்பலாக பதில் கூறிவிட்டு நழுவிவிட்டனர். இருவரின் கைகளிலும் கிரீஸ் போன்ற கறை இருந்துள்ளது அதை கழுவி சுத்தம் செய்யவே அருகில் இருந்த கழிவறைக்குச் சென்றுள்ளனர். அதன் அருகில்தான் எம்.எஸ்.ஆர் பள்ளியும் இருக்கிறது.
தேடுதல் வேட்டை
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் டி.கல்லுப்பட்டிக்கு வந்து சென்றதை அடுத்து அவர்கள் அதே பகுதியில் பதுக்கியிருக்கலாம் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அத்வானிக்கு குறிவைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு, பாஜக முக்கிய பிரமுகர்கள் கொலை சம்பவம், பெங்களூரு குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே திடீர் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டு குற்றச்சம்பவங்களில் செயல்படுபவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு வீடு வாடகைக்கு விடும் போது அவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.