பீகாரில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் நாசவேலை
கயா: பீகார் மாநிலம் கயா அருகே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்து தகர்த்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழனன்று முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாகவே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் கயா-முகல் காரி இடையே நேற்று இரவு 11 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ரயில் தண்டவாளம் கடுமையாக சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடப்பதற்கு 20 நிமிடத்திற்கு முன்புதான் அந்த பாதையில் அவுரா-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பைலட் என்ஜின் கடந்து சென்றது. குண்டு வெடிப்பையடுத்து அவுரா-டெல்லி ராஜ்தானி பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து அந்த பாதையில் ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
2003ஆம் ஆண்டு அவுரங்காபாத்தில் மாவோயிஸ்டுகள் இதே அவுரா-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை குண்டு வைத்து தகர்த்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்குப்பின் அவுரா-டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்னே பைலட் என்ஜின் விடப்பட்டது. அது ராஜ்தானி ரெயில் செல்லும் பாதையில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு சென்று ரெயில் தண்டவாளத்தை கண்காணிக்கும் அதனைத் தொடர்ந்து ராஜ்தானி ரயில் செல்லும்.
தற்போது கயா அருகே பைலட் என்ஜின் கடந்து சென்ற 20 நிமிடத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் பின்னால் வந்த ராஜ்தானி ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினார்கள். சேதம் அடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. நாசவேலையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாவோயிஸ்ட் தலைவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து பீகார் மாநிலத்தில் மாவேயிஸ்ட்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பாட்னா, கயா, அவுரங்காபார், ஜகனாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.