ஸ்னோடென் விவகாரம்: கோபத்தில் புதின் சந்திப்பை கேன்சல் செய்த ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஸ்னோடென்னுக்கு அடைக்கலம் வழங்கியதால், ரஷ்யா மீது கோபத்தில் இருக்கும் ஒபாமா, அதன் எதிரொலியாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த புதின் உடனான சந்திப்பை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்கா உலக நாடுகளை வேவு பார்த்தது என்ற பகீர் உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியர் அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை ஊழியரான ஸ்னோடென். இதனால் அவரை கைது செய்ய வலை வீசி தேடி வருகிறது அமெரிக்கா. ஆனால், ஸ்னோடென்னோ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பல நாடுகளிடமும் தஞ்சம் கேட்டுப் பார்த்தார். எல்லா நாடுகளும் கை விரித்து விட்ட நிலையில் கடந்த வாரம், ரஷ்யா மட்டும் ஒருவழியாக அவருக்கு தஞ்சமளிக்க முன் வந்தது.
இதனைக் கேள்விப்பட்ட அமெரிக்காவின் கோபம் தற்போது ரஷ்யா மீதும் பாய்ந்துள்ளது. அதன் எதிரொலியாக ரஷ்யா செல்லும்போது புதினை சந்திப்பதாக இருந்த அமெரிக்க அதிபரின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளதாவது, ‘ரஷியாவுடன் குற்றவாளிகளை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு உடன்படிக்கை இல்லை. இருந்தபோதிலும், இது (ஸ்னோடனுக்கு ரஷியா தஞ்சம் தந்திருப்பது) எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ‘ஜி -20' உச்சி மாநாட்டில் பங்கேற்க ஒபாமா ரஷியா செல்வது உறுதி என்றும், புதினை தனியாக சந்திக்கும் திட்டம் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.