நீதித்துறை நியமனங்களுக்கான ஆணையம் தொடர்பாக இன்று கேபினட் ஆலோசனை!
டெல்லி: நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்றி அமைப்பதற்கான மசோதா தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று பரிசீலிக்க இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் ஒன்று கூடி தேர்வு செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இது விமர்சனத்துக்குரியதாக இருந்து வருகிறது.
அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற தமிழரான பி. சதாசிவம் கூட, நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நீதித்துறை நியமனங்களுக்கான ஆணையம் அமைப்பது தொடர்பாக இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இது தொடர்பான விவாதம் கடந்த 8-ந் தேதியே நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்ட அமைச்சர் கபில்சிபல் அப்போது இல்லாததால் இன்று விவாதிக்கப்பட இருக்கிறது.
இதன்படி நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றுவதா? என்பது உள்ளிட்டவை இன்று விவாதிக்கப்பட இருக்கிறது. தற்போதைய நியமன நடைமுறைக்குப் பதிலாக, தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழு அமைத்து நீதித்துறை நியமனங்கள், மாற்றங்களை செயல்படுத்தலாம் என்று பரிசீலிக்கப்படுகிறது.
மேலும் உச்சநீதிமன்றத்தின் இருநீபதிகள், இரு வல்லுநர்கள், சட்ட அமைச்சக செயலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆணையம் அமைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முன்வைக்கப்பட்ட ஒரு யோசனையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரையும் இக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும் நீதித்துறை நியமனங்களுக்கான ஆணையக் குழுவில் இடம்பெறும் இரு வல்லுநர்களை லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பரிந்துரைக்கலாம் என்றும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தற்போதைய நிலைமையில் அரசு உத்தேசித்துள்ள நீதித்துறை நியமனங்களுக்கான குழுவில் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் இதர உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பராம்.