தேமுதிகவை விட்டு வெளியேறினார் ஆஸ்டின்!!
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் தேமுதிகவில் மாநில துணைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். 2009-ல் லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். 2011-ல் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டும் தோற்றார்.
தேமுதிகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சிட்க் பணிகள் எதிலும் ஈடுபடாமல் விலகி இருந்து வந்த ஆஸ்டின், தற்போது தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நேற்று ஆஸ்டின் எழுதியுள்ள கடிதத்தில், தேமுதிகவில் சேர்ந்து கடந்த 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் முழு நேரமும் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக என் மீது ஏனோ நம்பிக்கை இழந்து, என்னை எந்தப் பணியிலும் ஈடுபடவிடாமல் முடக்கினீர்கள்.
பல்வேறு அவமானங்களையும் தாங்கிக் கொண்டு 2 ஆண்டுகளாக கட்சியிலேயே இருந்தேன். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேமுதிகவை 2 ஆண்டுகளில் உங்களின் செயல்பாட்டால் மக்கள் வெறுக்கும்படியான நிலைக்கு தள்ளியுள்ளீர்கள். தலைமையின் நம்பிக்கையை இழந்து, மக்களின் நம்பிக்கையையும் இழந்த தேமுதிகவில் இனியும் தொடர்வது என்பது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாக என் மனம் எண்ணுகிறது.
இந்தச் சூழ்நிலையில் தங்களோடு இணைந்து அரசியல் பாதையில் என்னால் பயணிக்க முடியாது என்ற நிலையில் துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.