'டிப்பருக்கு' ஆதரவாக 'கன்டெய்னர்'களும் ஸ்டிரைக்- தூத்துக்குடி துறைமுகத்தில் பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் டாரஸ் டிப்பர் லாரிகளுக்கு ஆதரவாக கன்டெய்னர் லாரிகள் உட்பட அனைத்து லாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் துறைமுகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பெரிதும் முடங்கியது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமாக தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளுக்கு நிலக்கரி, சல்பேட் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அந்நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடியில் 600க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் உட்பகுதியில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளுக்கு நடை ஒன்றிற்கு ரூ.700 வாடகையாக வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் அந்த லாரிகளில் 40டன் வரை நிலக்கரி ஏற்றப்படுவதாகவும் அதனால் வாடகையை ரூ.700ல் இருந்து ரூ.1500ஆக அதிகரித்து தரவேண்டும் என்று வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அனைத்து லாரி உரிமையாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, கப்பல் வந்த 30தினங்களுக்குள் வாடகையை ஷிப்பிங் நிறுவனங்கள் வழங்கிடவேண்டும், துறைமுகத்தின் உள்ளே சன்டிங் அடிக்கும் லாரிகளுக்கு எடை வாடகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அனைத்து லாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக்கில் லாரி உரிமையாளர்களுடன் தனியார் தொழில் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.