பில்லி, சூன்யம் வைக்கும் மந்திரவாதிகளுக்கு 7 ஆண்டு ஜெயில்! ம.பியில் அவசர சட்டம்
மும்பை: மாந்திரீகம், பில்லி, சூன்யங்களில் ஈடுபடும் மோசடி மந்திரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க மகாராஷ்டிர மாநிலத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்வினை, மாந்திரீகம், பில்லி, சூன்யம் உள்ளிட்ட பல்வேறு மூட பழக்க வழக்கங்கள் இன்றைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய மோசடி பேர்வழிகளை நம்பி, பணம், பொருள் இழப்பது மட்டுமல்லாது பாலியல் ரீதியில் பலியாகும் பெண்களும் ஏராளம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது அவசர சட்டம் ஒன்றின் மூலமாக இத்தகைய மந்திர, தந்திர வேலைகள் மற்றும் பில்லி, சூன்யங்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர தபோல்கர்
புனே நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர் 'மகாராஷ்டிரா அந்தஷ்ட்டிர நிர்மூலன் சமிதி' என்கிற அமைப்பின் மூலமாக நீண்டகாலமாகவே மூட பழக்க, வழக்கங்களை எதிர்த்து பிரசாரம் செய்து வந்தார். மோசடி பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
சமூக ஆர்வலர் படுகொலை
68 வயது தபோல்கரின் பிரசாரங்கள் பலரையும் அச்சுறுத்தவே கடந்த ஆகஸ்ட் 20 அன்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர். தபோல்கர் கொலைக்கு எதிராக, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் குதித்ததோடு... 'மாந்திரீகம் மற்றும் பில்லி, சூன்யத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்' என்றும், கோரிக்கை வைத்தனர்.
கொலைக் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மூட நம்பிக்கைக்கு எதிராக சனிக்கிழமையன்று அவசர சட்டம் இயற்றியுள்ளது மராட்டிய மாநில அரசு.
உயிர்பலி கொடுத்த பின்னர்
ஒரு உயிர் பலிக்குப் பிறகாவது... 'மந்திர, தந்திர, பில்லி, சூன்ய வேலைகள் எல்லாம், மோசடி வேலைகள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறதே இந்த அரசு' என்று ஆறுதல் அடைந்துள்ளனர் மக்கள்.
தமிழ்நாட்டில்...
மகாராட்டிரா மட்டுமல்லாது நாடுமுழுவதும் பில்லி, சூனியம், செய்வினை செயல்பாடுகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இது போன்ற செயல்பாடுகளை தடை செய்வதோடு கடுமையான தண்டனைகளை வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.