ஏற்காடு இடைத் தேர்தலுக்கு தயாராகும் அதிகாரிகள்: மின்னணு இயந்திரங்கள் ஆய்வு
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த எஸ். பெருமாள். அதிமுக எம்எல்ஏவான இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியாக உள்ள ஏற்காடு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இன்னும் சில தினங்கள் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் இடைத் தேர்தலுக்கான முதற்கட்ட பணியைத் துவங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 1000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 400 கன்ட்ரோல் யூனிட்டுகளும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை சேலத்தில் இருக்கக் கூடிய அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டது. பெங்களூரூவில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்தின் பொறியாளர்கள் அரசியல் கட்சியினருக்கு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பரிசோதனை முறைகளை விளக்கினர்.