லோக்சபாவில் நிறைவேறியது: ஜெயிலில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மசோதா
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கத்தக்க குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழப்பார்கள் என கடந்த ஜூலை 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும், சிறையில் இருப்பவர்கள் மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறியது.
இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சியினரும், எம்.பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்நிலையில், சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. மாநிலங்களவையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
முன்னதாக, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தவறானது. அதை சரி செய்யும் அரசியல் சட்ட கடமை, பாராளுமன்றத்துக்கு இருக்கிறது' என்று கூறினார்.
சில எம்.பி.க்கள் விரிவான விவாதம் நடத்தக் கோரினர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் விவாதமின்றி நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, சுமார் 15 நிமிட விவாதத்துக்கு பிறகு, மசோதா நிறைவேற்றப்பட்டது.