சென்னையில் புதிய கட்டணம் அமல் படுத்துவதில் அலட்சியம்… 6 ஆயிரம் அனுமதி பெறாத ஆட்டோக்கள்
சென்னை: சென்னையில் புதிய கட்டணத்தை ஆட்டோக்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் கூட வழக்கம் போல கூடுதல் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. நகர சாலைகளில் அனுமதியின்றி ஓடும் 6000 ஆட்டோக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் 72 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அனுமதி மற்றும் பெர்மிட் பெற்ற அந்த ஆட்டோக்களுக்கு மட்டும் தான் அரசின் மீட்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

புதிய ஆட்டோ கட்டணம் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தை மீட்டரில் அக்டோபர் 15-ந்தேதிக்குள் திருத்தி அமைக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அனுமதி பெறாமல் 6 ஆயிரத்திற்கும் மேலான ஆட்டோக்கள் ஓடுவதாக கூறப்படுகிறது. இவற்றிற்கு உரிமையாளர்கள் என்ற ஆவணமோ, வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனுமதியோ கிடையாது.
புதிய கட்டணப்படி பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பழைய கட்டணமும் புதிய கட்டண விகிதமும் அடங்கிய அட்டை அனைத்து ஆட்டோ உரிமையாளர்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டண அட்டையை ஆட்டோக்களில் கட்டாயம் ஒட்டி இருக்க வேண்டும். அதன்படி தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது இன்னும் யாரும் புதிய கட்டணத்தை வசூலிக்க முன்வரவில்லை. வழக்கம் போல கூடுதல் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் கூட புதிய கட்டணத்தை ஆட்டோக்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
ஷேர் ஆட்டோ என்ற பெயரில் 'அபே' ஆட்டோக்கள் சென்னையில் பல பகுதிகளில் பயணிகளை ஏற்றி செல்கின்றன. அவற்றையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். புதிய ஆட்டோ கட்டணம் அத்தகைய ஆட்டோக்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆட்டோக்களின் உரிமையாளர் மட்டுமே இந்த அட்டையை பெற வேண்டும் என்பதால் பெயர் மாற்றம் செய்யாத ஆட்டோ உரிமையாளர்கள் கட்டண அட்டையை வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பெரும் பாலானவை தினசரி வாடகை அடிப்படையில் உரிமையாளர்களிடம் இருந்து டிரைவர்கள் வாங்கி ஓட்டுகிறார்கள். இதனால் ஆட்டோவின் உரிமையாளர் ஒருவராகவும் டிரைவர்கள் வேறு ஒருவராகவும் இருக்கிறார்கள். இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று ஆட்டோ தொழில் செய்து வருபவர்களும் பலர் இருப்பதால் ஆவணங்கள் அனைத்தும் அந்தநிறுவனத்திடம் சிக்கி உள்ளது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் ஆட்டோ உரிமையாளர்கள் கட்டண அட்டையை வாங்காமல் இருக்கிறார்கள். இதுவரை 24 ஆயிரம் ஆட்டோ உரிமையாளர்கள் புதிய கட்டண அட்டையை பெற்றுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
அனுமதி இல்லாமல் ஓடும் ஆட்டோக்களை அடையாளம் கண்டு அவற்றை பறிமுதல் செய்யவும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications