ஒதுங்கி போய்ருங்க.. அதான் உங்களுக்கும் உங்க வாரிசுக்கும் நல்லது- ஈபிஎஸ் ஆதரவு மாசெ பகிரங்க மிரட்டல்!
கள்ளக்குறிச்சி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி செல்வதற்கு எந்தவொரு இடையூறும் செய்யாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது, உங்களது வாரிசுக்கும் நல்லது என அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு ஓ.பன்னீர்செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை பதவிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் தொடர்ச்சியாக நாடி வருகிறது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓ.பன்னீர்செல்வம் முயல்வதாகவும், அதிமுகவை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்றும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.
எம்.பியுடன் லடாய்.. அதிமுக மா.செவை தூக்கிய போலீஸ்- வெளியே வர முடியாத வழக்குகளில்.. பதறிய தொண்டர்கள்!
அதிமுக பிளவு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளராக ஒற்றை அதிகாரத்தோடு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதேநேரம் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என ஈபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர்.
மோதல் உச்சகட்டம்
இதன் தொடர்ச்சியாக அதிமுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதி ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்தது. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அவர் கட்சியின் பொருளாளர் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைகளிலும் அவர் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று எழுதிய கடிதத்திலும், இந்த விஷயத்தை அழுத்திக் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.
கைப்பற்ற தீவிரம்
கட்சியின் ஒற்றைத் தலைமை பதவியைக் கைப்பற்ற ஈபிஎஸ் தரப்பினர் தீவிரமாக முயன்று வரும் நிலையில், நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடி வருகிறார் ஓபிஎஸ். அங்கும் அவருக்கு செக் வைக்க சட்ட நுணுக்கங்களை முன்வைத்து வருகிறது எடப்பாடி தரப்பு. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும், ஓபிஎஸ் மரியாதையாக விலகிச் செல்ல வேண்டும், கட்சியின் மெஜாரிட்டி நிர்வாகிகள் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மா.செ
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கும் கட்சி நடைபெறுவதற்கும் இடையூறு செய்யாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது, உங்களது வாரிசுக்கும் நல்லது என குமரகுரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எடப்பாடி தலைமையில்
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு பேசுகையில், "இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முயன்று வருகிறார். அதிமுகவை காப்பாற்றுகின்ற தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இல்லை என அனைத்து தொண்டர்களும் அறிந்து கொண்டுள்ளனர். அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமையின் கீழ் தான் அதிமுக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
உங்க வாரிசுக்கும் நல்லது
திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே துணிச்சலுடைய தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். ஒன்றரை கோடி தொண்டர்களை குழப்பாமல் இயக்கத்தை முடக்காமல் அதிமுகவின் மீது உண்மையிலேயே பற்று இருந்தால் நீங்கள் தயவுகூர்ந்து ஒதுங்கி இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கும் கட்சி செல்வதற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். எந்த ஒரு இடையூறும் செய்யாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது, உங்களது வாரிசுக்கும் நல்லது." எனத் தெரிவித்துள்ளார்.
முழு ஆதரவு
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 49 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.