பீகாரை அடுத்து கர்நாடக பாஜகவிலும் "பூகம்பம்".. அஸ்தமனமாகும் ஆபரேசன் சவுத் இந்தியா! அமித்ஷா அப்செட்
பெங்களூரு: தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று ஆபரேசன் சவுத் இந்தியாவை மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக சொந்த கட்சியினரே தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
Recommended Video
கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித்ஷா தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் ஆப்பரேசன் சவுத் இந்தியா திட்டத்தை அறிவித்தார். இதனை செயல்படுத்த துரிதமாக காய் நகர்த்தி வருகிறது பாஜக.
குறிப்பாக தமிழ்நாட்டில் எப்படியாவது 2 வது பெரிய கட்சியாக மாற்று சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தற்போது தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக நேரடியாக ஆட்சி செய்து வருகிறது.
தென் இந்தியா
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் ஆட்சி நடைபெறுகிறது. ஆந்திரா முதலமைச்சர் பாஜக ஜெகன் மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்களுக்கு ஆதரவளித்தே வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு, தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் டிஆர்எஸ் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றன.
புதுச்சேரியில் புயல்
எனவே அடுத்தடுத்த தேர்தல்களிலும் இந்த மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியை பிடிப்பது அரிதான காரியம் என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் முதலமைச்சர் என்.ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் ஆளுநர் தமிழிசை மற்றும் பாஜகவிற்கும் மோதல் இருந்து வருவதாக அரசியல் புரசலாக தகவல்கள் கசிந்து வருகின்றனர்.
கர்நாடகா கலகம்
நிலைமை இவ்வாறு கர்நாடகா மாநில பாஜக அரசிலும் கலகம் ஏற்பட்டு இருக்கிறது. எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோதே மாநில பாஜகவில் மோதல் ஏற்பட்டது. பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்று ஓராண்டாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக கலகக் குரல்கள் வலுக்கத் தொடங்கி இருக்கின்றன. மங்களூரு கலவரத்தை தொடர்ந்து அரசின்மீது குற்றம்சாட்டி பாஜக இளைஞரணியை சேர்ந்த பலர் கட்சியிலிருந்தே விலகினர்.
அமைச்சரின் ஆடியோ
இவர்களை திருப்திபடுத்த பல்வேறு அதிரடி உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பித்தாலும் பிரச்சனை ஓயவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி பேசிய ஆடியோ கசிந்தது. அதில், "நாங்கள் அரசை நடத்தவில்லை. ஏதோ சமாளிக்கிறோம்." என்று பேசியது பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
சித்தராமையாவுக்கு ஆதரவு
அதேபோல், கர்நாடகா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்துள்ள பேட்டியில், "காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மீண்டும் கர்நாடகா முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள். இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் நான் யாருக்கும் அடிமை கிடையாது." என்று கூறினார்.
ஆபரேசன் சவுத் இந்தியா
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் கர்நாடகா மாநில பாஜகவிற்குள் வெடித்து இருக்கும் கலகம் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதால் அமித்ஷா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை பாஜக நாடாளுமன்ற குழுவில் சேர்த்து இருக்கிறது அக்கட்சியின் தலைமை.