காவிரியில் நீர் திறக்கலைனா ராணுவம் வரும்! பங்காரப்பாவை நினைவுப்படுத்தி புலம்பிய கர்நாடகா அமைச்சர்
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்காவிட்டால் ராணுவத்தை அனுப்புவாங்க என கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக பங்காரப்பா இருந்தபோது வந்த எச்சரிக்கையை அவர் நினைவுக்கூர்ந்து இந்த கருத்தை தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது.

இதனால் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். இதை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். இதனால் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கேஆர்எஸ் அணை அமைந்து இருக்கும் மண்டியா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெங்களூரில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்று ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் பந்த் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛காவிரி விஷயத்தில் அரசியல் ரீதியாக பிரச்சனையை கையில் எடுத்து அரசை குற்றம்சாட்டுகின்றனர். பந்த், போராட்டத்தில் ஈடுபடுவோர் இப்போது நமக்கு (அரசு)ஆதரவாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் யாருக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்?.
மேலும் மாநில அரசின் சட்டப்பிரிவு தோல்வியடைந்துவிட்டது. கர்நாடகா சார்பில் அரசு சரியான வாதங்களை முன்வைக்கவில்லை என கூறுகின்றனர். ஆனால் அரசு சார்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இருந்த பெரும்பாலான சட்ட நிபுணர்கள் தான் இப்போதும் உள்ளனர். இத்தகைய சூழலில் நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு வாதங்களை எடுத்து வைப்பதில் தவறிவிட்டது எனக்கூறுவது என்பது சரியானதாக இருக்காது'' என்றார்.
இந்த வேளையில், கர்நாடகா அரசுக்கு வேறு வழியில்லையா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பரமேஸ்வர், ‛‛தற்போதைய சூழலில் நாம் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். இதற்கு முன்பு பங்காரப்பா ஆட்சியில் தண்ணீர் கொடுக்கமாட்டேன் என கூறினார். அப்போது வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ராணுவம் அனுப்பப்படும் என்றனர். நல்லவேளையாக அது நடக்கவில்லை. இதனால் நாம் படிப்படியாக இந்த விஷயத்தை அணுக வேண்டும் '' என்றார்.












Click it and Unblock the Notifications