மைனாரிட்டி கல்லூரிகளிலும் ஹிஜாப்பிற்கு தடை! ஆனால் மாணவர்களுக்கு மட்டுமே.. சிறுபான்மை துறை விளக்கம்
பெங்களூர்: ‛‛கர்நாடகாவில் உள்ள மைனாரிட்டி கல்வி நிறுவனங்களில் மதம்சார்ந்த ஆடைகள் அணிய தடை விதிக்கும் கட்டுப்பாடு மாணவர்களுக்கு மட்டுமே. இது ஆசிரியர்களுக்கு அல்ல''என கர்நாடக அரசின் சிறுபான்மை நலத்துறை தனது சுற்றறிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சிலர் காவி ஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறையை பின்பற்றக்கோரி உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வார விசாரணையின்போது பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

சிறுபான்மை நலத்துறை சுற்றறிக்கை
கர்நாடக சிறுபான்மை நலத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில கல்லூரிகளில் ஹிஜாப் மட்டுமே யூனிபார்மாக உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 16ல் சிறுபான்மை நலத்துறை சார்பில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அடிப்படையில் சுற்றிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

அடுத்த உத்தரவு வரை தடை
அதில், ‛‛கல்வி நிறுவனங்களில் மதம்சார்ந்த ஆடைகளை அணிய கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை இதை கடைப்பிடிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. இதன்மூலம் ஹிஜாப், காவி ஷால் போன்ற மத அடையாளங்களோடு சிறுபான்மை நலத்துறை கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டது.

சந்தேகங்கள்
இந்நிலையில் தான் இந்த உத்தரவு சில சந்தேகங்களுக்கு இடமளித்தது. அதாவது இது மாணவர்களுக்கு மட்டுமா, இல்லையென்றால் ஆசிரியர்களுக்கும் பொருந்துமா என்பதில் கேள்வி எழுந்தது. ஏனென்றால் பல இடங்களில் ஆசிரியைகளையும் ஹிஜாப் அகற்ற கூறும் சம்பவம் நடந்தது. இதற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அல்ல
அதன்படி, ‛மைனாரிட்டி பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த உடை கட்டுப்பாடு என்பது மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது ஆசிரியர்களுக்கு அல்ல. நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை சிறுபான்மை நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்' என கூறியுள்ளது.
Recommended Video

விளக்கம் ஏன்
முன்னதாக துமகூருவில் ஹிஜாப் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி விரிவுரையாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கல்லூரி சிறுபான்மை நலத்துறையின் கட்டுப்பாட்டில் வராது என்றாலும் பல கல்லூரிகளில் இந்த சுற்றிக்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமலானது. இது பெரும் விவாத பொருளான நிலையில் தான் கர்நாடக சிறுபான்மை நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications