பெங்களூரில் மோசமான ‛டிராபிக்'..168 மணிநேரம் ரோட்டிலேயே நிற்கும் மக்கள்.. ஆண்டுக்கு ரூ.17,000 காலி
பெங்களூர்: பெங்களூரில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சராசரியாக 168 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். அதோடு போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் வரை வீண் செலவு ஏற்படுகிறது என்று அதிர்ச்சி டேட்டா வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. நம் நாட்டின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஐடி உள்பட பல்வேறு முக்கிய துறைகளை சார்ந்த நிறுவனங்கள் பெங்களூரில் அதிகம் உள்ளன. இதனால் பிற மாநிலங்களில் இருந்து பெங்களூரில் தங்கி ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முக்கிய டேட்டா வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாகTomTom Traffic Index-யில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக பெங்களூர் மாறி உள்ளது. இதனால் பெங்களூரில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சராசரியாக 168 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இது ஒரு வாரத்துக்கு சமமாகும்.
பெங்களூர் நகரின் சராசரி போக்குவரத்து நெரிசல் அளவு 74.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் பெங்களூரு சாலைகளில் பயணிக்க ஆகும் நேரம், போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரத்தை விட 74.4 சதவீதம் அதிகமாகும்.
வருவாய் அடிப்படையில் பார்த்தால் பெங்களூரு நகரில் வாழும் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக ரூ.8.93 லட்சம் சம்பாதிக்கிறார். இதில் ஆண்டுக்கு சுமார் ரூ.17,000 போக்குவரத்து நெரிசல் காரணமாக வீணாகிறது.
அதேபோல் பிற நகரங்களை ஒப்பிடும்போது மும்பையில் போக்குவரத்து நெரிசல் அளவு 63.2 சதவீதமாக உள்ளது. அங்குள்ள மக்கள் ஆண்டுக்கு 126 மணிநேரம் போக்குவரத்தில் இழக்கின்றனர். டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அளவு 60.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 104 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் வீணடிக்கின்றனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசல் சதவீதம் 58.9 சதவீதமாக இருந்தாலம் கூட அங்குள்ள மக்கள் ஆண்டுக்கு சுமார் 150 மணிநேரத்தை ரோட்டிலேயே செலவிடுகின்றனர். இது மும்பை மற்றும் டெல்லியை விட அதிகம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications