குமாரசாமியை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும்.. ஆளுநரிடம் பாஜக மனு
பெங்களூர்: பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டுமென்று, ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் எடியூரப்பா.
14 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், குமாரசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தலைமைச் செயலகமான விதான சௌதா பின்புறம் உள்ள காந்தி சிலை அருகே எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் இறுதியில் எடியூரப்பா பேசியதாவது: அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை சந்திக்காமல் ஹோட்டலுக்கு உள்ளேயே அமர்ந்து கொண்டு உள்ளனர். இப்படியான ஒரு சூழ்நிலையில் பெரும்பான்மை இல்லாத அரசை குமாரசாமி நடத்தி வருகிறார்.
மானம், மரியாதை இருந்தால் குமாரசாமி இந்த நேரத்திற்கு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் தந்தை தேவகவுடாவாவது இதை அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லை என்பதால் இன்று ஆளுநரை சந்தித்து முதல்வர் குமாரசாமி பதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
இதனபிறகு சற்று நேரத்தில் பாஜக எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தார் எடியூரப்பா.