பெங்களூருக்கு வரப்போகும் பிரமாண்ட பேஸ்புக் அலுவலகம்.. மார்க் போட்ட மாஸ் கணக்கு!
பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது. ஆசியாவில் இது பேஸ்புக்கின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் பேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய டேட்டா சென்டர் ஒன்றை கட்டி வருகிறது. ஆசியாவில் கட்டப்படும் தகவல்களை பாதுகாக்க உதவும் முதல் டேட்டா சென்டர் இதுதான்.
இந்தியாவில் 2010ல் ஹைதராபாத்தில் பேஸ்புக் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது. அதற்கு அடுத்த வருடங்களில் மும்பை மற்றும் டெல்லியில் பேஸ்புக் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. பெங்களூரில் சிறிய பேஸ்புக் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
எங்கு வருகிறது நிறுவனம்
இந்த நிலையில்தான் பெங்களூரில் பேஸ்புக் நிறுவனம் மிக பிரமாண்டமான அலுவலகம் ஒன்று கட்ட இருக்கிறது. ஆசியாவில் இது பேஸ்புக்கின் மிகப்பெரிய அலுவலகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெங்களூரின் சல்லங்கத்தா பகுதியில் உள்ள எம்பசி கோல்ப் லிங்க் பிசினஸ் பார்க்கில் இந்த நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
என்ன வேலை
இங்கு என்ன மாதிரியான பணிகளை செய்ய போகிறார்கள் என்று இதுவரை விளக்கப்படவில்லை. ஆனால் ஆசிய மொத்தத்திற்கும் பேஸ்புக்கின் தலைமையிடம் போல இந்த அலுவலகம் செயல்பட உள்ளது என்று தகவல் வருகிறது. இந்தியாவில் பேஸ்புக் பயனாளிகள் பல கோடி பேர் இருப்பதால் தற்போது பெங்களூரை குறி வைத்து இருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
எத்தனை பேர்
இங்கு 3000 பேர் வரை வேலை பார்க்க போகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதிகபட்சம் 10 அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தில் இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினரும் வேலைப் பார்க்க போகிறார்கள். அதற்கு ஏற்றபடி மிக பிரமாண்டமாக இந்த அலுவகம் கட்டப்பட உள்ளது.
புது பெருமை
பெங்களூரில் ஏற்கனவே அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் இருக்கிறது. இப்போது பேஸ்புக்கும் களமிறங்கி உள்ளது. வால்மார்ட் ஸ்டிரிட் ஆவணங்களின் படி பேஸ்புக், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவற்றை சேர்த்து எஃப்எஎஎம்ஜி (Facebook, Amazon, Apple, Microsoft and Google - FAAMG ) என்று அழைப்பார்கள். உலகில் மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இந்த ஐந்து நிறுவனங்களும் செயல்படுகிறது. அந்த பெருமை பெங்களூருக்கு வந்துள்ளது.