Exclusive: 2500 வருடம் பழமையானது.. அதிக ஞான பீட விருது பெற்றது கன்னடம்- மொழி அறிஞர் பளிச் பேட்டி!
பெங்களூர்: 2500 பழமையான கன்னடம், பல தனித்த சிறப்பம்சங்களை கொண்டது. தமிழின் சகோதர மொழி. திராவிட மொழி. அதைத்தான் இந்தியாவின் மோசமான மொழி என்று கூறியுள்ளது கூகுள் சர்ச் ரிசல்ட்.
இதனால் கன்னடர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்புக்கும் காரணமாக, மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள்.
தமிழர்களுக்கு மலையாளம் அறிமுகமான அளவுக்கு, அதை விட பழமையான திராவிட மொழியான கன்னடம் அறிமுகமாகவில்லை என்பதுதான் உண்மை.
கலாச்சார ரீதியாக அதிக தொடர்புகள் இருப்பது, திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் போன்றவற்றின் மூலம் மலையாளம் தமிழர்களுக்கு அறிந்த மொழியாகிவிட்டது. தெலுங்கும் அரசியல் மற்றும் சினிமா மூலம் தமிழகத்திற்கு நெருக்கமானது. ஆனால் பக்கத்திலேயே இருந்தாலும் கன்னட மொழியின் செழுமை பற்றி கணிசமான தமிழர்களுக்கு தெரியாது.
கூகுள் சர்ச்சைகளைத் தொடர்ந்து, கன்னடத்தின் தனித்துவம் என்ன, அதன் செழுமை, அழகியல் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. எனவே, "ஒன்இந்தியா தமிழ்" சார்பில், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், கன்னட பேராசிரியர் மற்றும் கன்னட கவிஞரான எஸ்.ஜி.சித்தராமையாவை தொடர்பு கொண்டோம்.
கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம... கூகுள் அறிவிப்பு
இதோ சித்தராமையா வார்த்தைகளில் இருந்து..: கன்னடத்திற்கு 2500 வருட கால நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. உருவ எழுத்துக்களிலிருந்து, ஒரு தத்துவ வாழ்க்கையின் பாரம்பரியத்தை உள்ளடக்கி வாழும் வரலாறு. கன்னட எழுத்தாளர்கள்தான், இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக, 8 ஞான பீட விருதுகளை பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு இலக்கியவாதிகளை உருவாக்கியுள்ளது இந்த மொழி. உயிரோட்டமான கன்னட மொழிக்கு, பிற உயிரோட்டமான மொழிகளுக்கு இருக்கும் தன்மைகள் இருந்தாலும், தனித்துவமான தன்மைகளும் உள்ளன.
கன்னடத்தில், மொத்தம் 52 எழுத்துக்கள் உள்ளன. உலகிலுள்ள எந்த ஒரு மொழியையும் தனது எழுத்துக்களில் அடக்கும் தன்மை கன்னடத்திற்கு உள்ளது. பேச்சுக்கும், எழுத்துக்கும் கன்னடத்தில் வித்தியாசம் கிடையாது. அதாவது ஆங்கிலத்தில் walk என்பதில் L சைலன்ட். அதுபோல கன்னடத்தில் சைலன்ட் வார்த்தைகள் கிடையாது. சமஸ்கிருத மொழி எழுத்துக்களை ஈர்த்திருந்தாலும், சம காலத்திற்கு ஏற்ப சரியாக பயன்படுத்தும் மொழி கன்னடம். கன்னட சகோதர மொழிகளான திராவிட மொழிகளில் இந்த தனித்துவம் இல்லை. உதாரணத்திற்கு சங்கர் என்பதற்கு பயன்படுத்தப்படும் ச என்ற எழுத்து மட்டும் தமிழில் உண்டு. கன்னடத்தில் ச என்பதற்கு பல வார்த்தைகள் உண்டு.
எந்த பாஷையையும் தன்னுள் வைத்து எழுத முடிவது கன்னட எழுத்துருவின் சிறப்பம்சம். கன்னட எழுத்துக்களை, எழுத்துருக்களின் ராணி என்று கூறியவர் வினோபா பாவே. அவர் பல மொழிகளை அறிந்த அறிஞர். ஆனால், கன்னடம் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களே அதிகம். கன்னடம் விட்டு ஆங்கிலம், ஹிந்தி படிப்பதுதான் பெருமை என நினைக்கிறார்கள். கன்னடர்களை போல மொழி சார்ந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை.
2500 வருடங்கள் பழமையானது கன்னடம். ஆனால் அதை, தமிழின் சிலப்பதிகாரம், திருக்குறள் போல எழுத்தாக அக்காலத்தில் வைக்கவில்லை. மக்களின் பேச்சு மொழியாக இருந்தது. எனவேதான், இதன் பழமையை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம், மொழி அறிஞர் ஷெட்டர் இது தொடர்பாக தனது புத்தகத்தில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதை வைத்துதான் கன்னடத்தின் பழமையை நாங்கள் உறுதி செய்கிறோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.