புல்டோசரை கொண்டு வாங்க.. அதெப்படி பஸ் ஸ்டாண்ட் மசூதி போல இருக்கலாம்.. சர்ச்சை கிளப்பிய பாஜக எம்பி
பெங்களூர்: மைசூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஒன்றை இடித்துவிடுவதாக பாஜக எம்பி பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ச்சியாகச் சர்ச்சை நிகழ்வுகளே நடந்து வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் அங்கு முதலில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையானது.
அதைத்தொடர்ந்து ஹலால் இறைச்சி விவகாரம் குறித்து மோதல் ஏற்பட்டது. மேலும், இந்து கோயில்கள் முன் கடை வைத்திருந்த மாற்று மதத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
போலீஸ் இல்லாத செக் போஸ்ட்.. வசூலில் குதித்த 'பசு காவலர்கள்'.. பாதிக்கப்படும் தமிழக வியாபாரிகள்! ஷாக்
கர்நாடகா
இப்படி அடுத்தடுத்து நடைபெறும் சர்ச்சை காரணமாக அங்குப் பதற்றமான ஒரு சூழலே உருவாகி உள்ளது. இதற்கிடையே பேருந்து நிலையத்தின் டிசைன் விவகாரம் தொடர்பாகக் கர்நாடக பாஜக எம்பி ஒருவர் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அந்த பேருந்து நிலையத்தில் 2,3 நாட்களில் இடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தானே புல்டோசரை கொண்டு இடித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
பேருந்து நிலையம்
கர்நாடக மாநிலம் மைசூரு-ஊட்டி சாலையில் தான் இந்த பேருந்து நிலையம் உள்ளது. இதன் மேற்புறம் மசூதி போல உள்ளதாகச் சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பினர். மேலும், அதன் ஃபோட்டோகளையும் இணையத்தில் பரப்பினர். இந்த போன்ற பேருந்து நிலையத்தைத் தான் புல்டோசர் போட்டு தரைமட்டமாக்குவோம் என்று கர்நாடக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா மிரட்டல் விடுப்பது போலப் பேசியுள்ளார்.
பாஜக எம்.பி
இது தொடர்பாக பாஜக எம்.பி சிம்ஹா மேலும் கூறுகையில், "இந்த பேருந்து நிலையம் தொடர்பான படங்களை நான் சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். பஸ் ஸ்டாண்டில் மூன்று குவி மாடங்கள் உள்ளன.. நடுவில் பெரியது மற்றும் அதன் அருகில் சிறியது உள்ளன. இது மசூதி தான். இந்த கட்டுமானத்தை 3 அல்லது 4 நாட்களில் இடித்துத் தள்ளிவிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் இடிக்கவில்லை என்றால் நானே இடித்துவிடுவேன்" என்றார்.
புல்டோசர்
விரைவில் அந்த பேருந்து நிலையத்தை இடிக்கவில்லை என்றால் தானே ஜேசிபியை கொண்டு இடித்துவிடுவேன் என்று அவர் மிரட்டல் விடுப்பது போலப் பேசியுள்ளது. பாஜக எம்பியின் இந்தப் பேச்சு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காண்டிராக்டர் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கண்டனம்
அதேநேரம் பாஜக எம்பியின் இந்த பதற்றத்தை ஏற்படுத்தும் பேச்சுக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக எம்பி தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகச் சாடியுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் சலீம் அகமது , இது மைசூரு எம்பியின் முட்டாள்தனமான கருத்து என்றும் குவி மாடங்கள் இருக்கிறது என்பதற்காக அவர் அரசு அலுவலகங்களையும் இடிப்பாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகா
கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.