ஆளுநர் மாளிகை முற்றுகை.. காங்கிரஸ், மஜத தலைவர்கள் ஆவேசம்.. தள்ளாத வயதிலும் களம் வந்த தேவகவுடா
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்கும் அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டி, பாஜகவை கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ், மஜத தலைவர்கள் தர்ணா நடத்தினர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா (86), முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால், ராஜ்பவனில் இருந்து சுமார் 1 கி.மீ தூரத்திலுள்ள கப்பன் பார்க் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அருகே சாலையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் முடிவடைந்ததும், ராஜ்பவனை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக சென்றனர். சித்தராமையா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த பக்கம் ஆளுநரை ஆளும் கட்சி அழுத்தம் கொடுத்தால், மற்றொரு பக்கம், எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் ராஜ்பவன் சென்று, ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, குமாரசாமியை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என அதேநேரத்தில் கோரிக்கைவிடுத்தனர்.
இதனிடையே, டிவிட்டரில், #BJPKidnapsMLAs என்ற ஹேஷ்டேக், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் இதில் பாஜகவுக்கு எதிராக கருத்து சொல்வதை பார்க்க முடிகிறது.

ஆனால், பாஜகவுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்று, ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவிக்கிறார். காங்கிரஸ், மஜத தலைமை மீது உள்ள அதிருப்தியில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தாலும் பாஜகவை பொறுப்பாக்க கூடாது என செய்தியாளர்களிடம் கோபம் வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications