கர்நாடகாவில், அம்பேத்கர் வழியில் புத்த மதத்திற்கு மாறிய 500 தலித்துகள்! சாமி படங்களை ஆற்றில் வீசினர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் சட்டமேதை அம்பேத்கரை பின்பற்றி 500 தலித் மக்கள் இந்து மதத்தை துறந்து புத்த மதத்தை தழுவினர். மேலும் சிலர் வீட்டில் இருந்த இந்து தெய்வங்களின் படங்களை கிருஷ்ணா நதியில் வீசியெறிந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கட்டாய மதமாற்றம் என்பது குற்றத்துக்குரியது. இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டால் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பினும் கட்டாய மதமாற்றம் இன்றி ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. இருப்பினும் இது பல வேளைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் நடந்த சம்பவம் பெரும் விவாதத்துக்குள்ளாகி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:

புத்த மதத்துக்கு மாற திட்டம்
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புராவில் கேல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ஹூனசாகி கிராமத்தை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். இந்த கிராமம் உள்பட வேறு சில கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் நீண்டகாலமாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சட்டமேதை அம்பேத்காரை பின்பற்றி அவர்கள் புத்த மதத்துக்கு மாற்ற முடிவு செய்தனர்.

மதம் மாறிய 500 பேர்
அதன்படி கோல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளை சார்பில் அக்டோபர் 14ல் விழா ஏற்பாடு செய்தது. இதையடுத்து 500க்கும் அதிகமான தலித் மக்கள் இந்து மதத்தை கைவிட்டு புத்த மதத்துக்கு தீக்சை பெற்றனர். அம்பேத்காரும் இதேநாளில் தான் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தை தழுவினார். 1956 அக்டோபர் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புத்த தர்ம தீக்சா என்ற பெயரில் நடந்த விழாவில் அம்பேத்கார் புத்தமதத்தை தழுவினார். அதனடிப்படையில் தான் தற்போது இவர்களும் மாதம் மாறி உள்ளனர்.

ஆற்றில் தெய்வங்களில் போட்டோ-சிலை வீச்சு
இதையடுத்து சுராபுராவில் வசிப்பவரும் கோல்டன் கேவ் புத்த விஹார் அறக்கட்டளையின் தலைவருமான வெங்கடேஷ் ஒசமணி உள்ளிட்ட சிலர் தங்கள் வீட்டில் இருந்த இந்து தெய்வங்களின் போட்டோக்களை எடுத்து கிருஷ்ணா நதியில் வீசினர். இதுபற்றி அறக்கட்டளையின் தலைவரான வெங்டேஷ் ஒசமணி கூறுகையில், ‛‛நாங்கள் குடும்பத்துடன் புத்த மதத்தை தழுவினோம். இதனால் வீட்டில் இருந்த சாய்பாபா, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் படம், சிலைகளை ஆற்றில் கரைத்துள்ளோம்.

மதமாற்ற தடை சட்டம்?
இந்நிலையில் தான் ஆற்றில் இந்து தெய்வங்களில் படம், போட்டோக்களை வீசியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. கர்நாடகாவில் மதமாற்றத்தை எதிர்க்கும் வகையிலான மதச்சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா 2021யை மாநில அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இது மதமாற்ற எதிர்ப்பு சட்டம் என கூறப்படுகிறது. இதன்படி மதம்மாற விரும்புவோர் கலெக்டரை சந்தித்து மாறும் மதம் தொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் பெற வேண்டும். இதற்கு ஆளுநர் சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தார். இந்நிலையில் தான் தற்போது யாதகிரியில் மதமாற்ற நிகழ்வு நடந்துள்ளது.இருப்பினும் இதற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹள்ளியில் பூதம்மா கோவிலில் சாமி ஊர்வலம் நடந்தது. தலித் சிறுவன் ஒருவர் சாமி சிலையை தொட்டான். இதையடுத்து கிராம மக்கள் குடும் எதிர்ப்பு தெரிவித்து சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது சர்ச்சையான நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த சாமி சிலைகளை அகற்றிவிட்டு அம்பேத்கார் படத்தை வைத்து வழிபட தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது யாதகிரி மாவட்டத்தில் 500 தலித் மக்கள் அம்பேத்காரை பின்பற்றி புத்த மதத்துக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications