ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், 800 கிலோ வைர நகை-தமிழகத்திடம் எப்போது ஒப்படைப்பு? நீடிக்கும் சஸ்பென்ஸ்!
பெங்களூர்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், 800 கிலோ வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதற்கான தடையை ஏப்ரல் 15-ந் தேதி வரை நீட்டித்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் அப்போது ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் சிறையில் 4 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வைர நகைகள், 11344 பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடகாவில் இந்த வழக்கு நடைபெற்றதால் கர்நாடகா அரசின் பாதுகாப்பில் இந்த நகைகள் இருந்து வந்தன. இவற்றை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
இதனிடையே ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் கர்நாடகா அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கின் விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி முகமது நவாஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா அரசு தரப்பில் ஜெயலலிதாவின் நகைகளுக்கு தீபா, தீபக் உரிமை கோருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதற்கான இடைக்கால தடையை ஏப்ரல் 15-ந் தேதி வரை நீட்டித்து வழக்கு விசாரணையை நீதிபதி முகமது நவாஸ் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications