கர்நாடகா: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க முடியாது.. சபாநாயகர் ஒரே போடு
Recommended Video
பெங்களூர்: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என்று, சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் நேரில் வந்து ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் வாபஸ் பெற்றுள்ளார். எனவே 14 எம்எல்ஏக்கள் பலத்தை இழந்துள்ளது கூட்டணி.

ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும், அதற்கு, ஒவ்வொரு காரணம் சொல்லி வருகிறார்கள். சிலர் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று ராஜினாமா செய்ததாகவும், பலரும், தொகுதிக்கு, இந்த அரசு, நல்லது செய்யவில்லை என்றும் காரணம் சொல்கிறார்கள். ஆனால் பின்னணியில் இருப்பது பாஜக என்பதே, ஆளும் கட்சி தலைமையின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனிடையே, 13 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்க சென்றபோதெல்லாம், சபாநாயகர் ரமேஷ் குமார், தனது அறையில் இல்லை. எனவே சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு வந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்றுதான் சபாநாயகர் பெங்களூர் திரும்புவதாக தெரிவித்திருந்தார்.
அறிவித்தபடியே, இன்று தலைமைச் செயலகத்திலுள்ள தனது அலுவலகம் வந்த ரமேஷ் குமார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், நெருக்கடியோ மிரட்டலோ இல்லாமல், சொந்த விருப்பத்தில், எம்எல்ஏக்கள் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளனரா, என்பதை அறிந்து கொள்ள வேண்டியது, எனது கடமை. எனவே, நேரில் வந்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தால் அதை பரிசீலிப்பேன். இதுவரை ராஜினாமா கொடுத்துள்ளவர்கள் என்னிடம் நேரில் சந்தித்து கடிதம் அளிக்கவில்லை என்பது பற்றி, ஆளுநருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரமேஷ் குமார் அறிவிப்பை வைத்து பார்க்கும்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. எனவே கர்நாடக அரசியல் பிரச்சினைக்கு இன்று க்ளைமேக்ஸ் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications