"ஜெய் ஸ்ரீராம்.!" 500 ஆண்டு பழமையான கர்நாடக மதரசாவில் எழுந்த கோஷம்! தசரா பூஜை நடத்தியதால் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பழைமையான மதரசா ஒன்றில் திடீரென சிலர் அத்துமீறி நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஹிஜாப் தொடங்கிப் பல சர்ச்சைகள் அங்குக் கிளம்பி வருகிறது.
இதற்கிடையே இப்போது அங்குள்ள மதரசா ஒன்றில் அத்துமீறி சிலர் நுழைந்து பூஜை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதரசா பள்ளிகளுக்கு யோகி அரசு கிடுக்கிப்பிடி.. கண்டிப்பாக தேசிய கீதம் பாட வேண்டும் என உத்தரவு
கர்நாடகா
கர்நாடகா மாநிலம் பிதார் என்ற மாவட்டத்தில் பழமையான மஹ்மூத் கவான் மதரசா அமைந்து உள்ளது. 1460களில் கட்டப்பட்ட இந்த மதரசா இப்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இந்த பழமையான மஹ்மூத் கவான் மதரசாவும் இடம் பெற்று உள்ளது. இந்த பழமையான மதரசாவில் தான் இந்தச் சம்பவம் நடந்து உள்ளது.
மதரசா
கடந்த புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தசரா ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர் திடீரென அந்த மதரசாவில் அத்துமீறிப் புகுந்ததுள்ளனர். அவர்கள் திடீரென கோஷங்களையும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பழமையான அந்த மதரசாவில் பூஜையும் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கோஷங்கள்
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்து உள்ளன. மதரசாவில் அத்துமீறி நுழைந்த அந்த கும்பல் "ஜெய் ஸ்ரீ ராம்" மற்றும் "இந்து தர்மம் வாழ்க" என்ற கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து ஒரு மூலைக்குச் சென்று பூஜையும் செய்துள்ளனர். வெளியே நிற்கும் ஒரு பெரிய கூட்டம் இந்தக் கட்டிடத்தில் அத்துமீறி நுழைய முயல்வது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
போராட்டம்
இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் பிதாரில் இருந்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால் வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். மஸ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்களை அவமதிக்கும் நோக்கில் இதுபோன்ற சம்பவங்களைக் கர்நாடக அரசு ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
குற்றச்சாட்டு
கர்நாடகாவில் சில இடங்களில் பாஜக திட்டமிட்டு வகுப்புவாத மோதல்களை ஏற்படுத்தித் துருவ மயமாக்கல் அரசியலை முயல்வதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஹிஜாப் சர்ச்சைக்குப் பின் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்துக் கோயில்கள் முன் இருந்த முஸ்லிம் வணிகர்கள் கடை அடித்து நொறுக்கப்பட்டது. ஹலால் கறிக்கு எதிரான பிரசாரம் செய்யப்பட்டது. இந்தாண்டு இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.