அதிகாரிகளின் அலட்சியம்.. பெங்களூரில் நடு வானில் நேருக்கு நேர் மோதவிருந்த 2 விமானங்கள்.. ஜஸ்ட் மிஸ்
பெங்களூரு: விமான நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால் நேருக்கு நேராக மோத இருந்த 3000 அடி உயரத்தில் பறந்த விமானங்கள் விபத்துக்குள்ளாகாமல் தப்பித்திருக்கின்றன.
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமானநிலையத்தில் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்து நடந்திருந்தால் இரண்டு விமானத்திலும் இருந்த பயணிகள் கதி மோசமாகி இருக்கும்.
கடந்த 7ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், வடக்கில் இருந்து ஒரு இண்டிகோ விமானமும், தெற்கில் இருந்து ஒரு இண்டிகோ விமானமும் ஒரே நேரத்தில் புறப்பட்டிருக்கிறது. விமான நிலைய அறிவுறுத்தலில் புறப்பாடு ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. இது விமானத்தில் இருந்த பைலட்டுக்குத் தெரியாது.

இண்டிகோ விமானம்
பெங்களூருவில் இருந்து கொல்கத்தா செல்ல பயணிகளுடன் இண்டிகோ 6இ -455 என்ற விமானம் தயாராக இருந்தது. அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்ல 6E-246 என்ற விமானமும் தயாராக இருந்தது. பெங்களூரு விமான நிலையத்தின் ஓடு பாதைகளில் வடக்கில் பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானங்கள் இருக்கும். தெற்கு ஓடு பாதையில் தரையிறங்கும் விமானங்களுக்காக ஒதுக்கப்படும்.

ஒரே ஓடுபாதை
ஆனால், சம்பவம் நடந்த 7ம் தேதி அதிகாலை, பெங்களூரு விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையிலேயே விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் விதமாக மாற்றப்பட்டது. தெற்கு ஓடுபாதை பராமரிப்புக்காக அப்போது மூடப்பட்டது. இந்தத் தகவல் தெற்கு ரன்வே டவரில் இருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. கொல்கத்தா செல்லும் விமானம் தெற்கு ரன்வேயில் தயாராக இருந்தது. ரன்வே மூடப்பட்ட விஷயம் தெரிவிக்கப்படாததால், இந்த விமானம் பறப்பதற்கான அனுமதியை தெற்கு டவர் அதிகாரிகள் பைலட்டுக்கு கொடுத்தனர். இதையடுத்து பைலட் விமானத்தை இயக்கத் தொடங்கினார்.

புவனேஸ்வர் விமானம்
அதேசமயம், பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்ல வடக்கு ரன்வேயில் இண்டிகோ விமானம் பயணிகளுடன் தயாராக இருந்தது. இதற்கு வடக்கு ரன்வே டவர் கண்ட்ரோல் அதிகாரிகள் பறப்பதற்கான அனுமதியைக் கொடுத்தார்கள். இதையடுத்து ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களும் பறப்பதற்குத் தயாராகி ரன்வேயில் வந்து கொண்டிருந்தன.

ரேடார்
அதிகாரிகள் செய்த குளறுபடியால் வடக்கில் இருந்து ஒரு விமானமும் தெற்கில் இருந்து ஒரு விமானமும் விமான நிலைய ரன்வேயின் மத்திக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமான நிலைய ரேடார் குழு அதிகாரிகள் இரண்டு விமானமும் நேருக்கு நேர் வருவதை கவனித்து சுதாரித்துக் கொண்டனர். உடனடியாக ரேடார் குழு, இரண்டு விமானங்களின் பைலட்டுகளுக்கும் இதை அவசரமாகத் தெரியப்படுத்தினர்.

தவிர்க்கப்பட்ட விபத்து
நேருக்கு நேராக மோத இருந்த விமானம், பைலட் மற்றும் ரேடார் கண்ட்ரோல் டீம் சமயோஜிதத்தால், 3000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த கொல்கத்தா செல்லும் விமானம் இடது பக்கமும், புவனேஸ்வர் விமானம் வலது பக்கமும் திரும்பியது. இதனால் நடுவானில் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஏர்போர்ட் அத்தாரிட்டி இதுகுறித்து எங்கும் பதிவு செய்யவில்லை. சிவில் ஏவியேசன் டிஜி அருண்குமார்,இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications