மேகதாது அணை கட்டுவது உறுதி.. மீண்டும் வம்பிழுக்கும் கர்நாடக அமைச்சர்.. ராமதாஸ் கண்டனம்
பெங்களூர்: மேகதாது அணையை கட்டுவது உறுதி என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று அணை கட்ட ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஒன்று மட்டும் நிற்கிறோம் என்று பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் உறுதியளித்துள்ளன. ஆனால் மீண்டும் கர்நாடகத்திலிருந்து அதற்கு எதிர்மறையான பதிலே கிடைத்திருக்கிறது.

தடையில்லையாம்
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இப்படியாக இன்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கூறுகிறார். குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் பசுவராஜ் கூறியிருக்கிறார். கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராமதாஸ் ட்வீட்
இதுகுறித்து பாமக நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது ஆகும்.

அனைத்துக் கட்சி
மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதன்பிறகும் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

மாநில உறவுக்கு எதிரானது
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எதையும் மதிக்காமல் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அமைச்சர் பொம்மை தொடர்ந்து பேசி வருவது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடை உறவு தத்துவத்திற்கு எதிரானது.
Recommended Video

மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகளை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications